Tuesday 19 November 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 30



                                                  சுப்ரமண்ய புஜங்கம்....  30



जनित्री पिता च स्वपुत्रापराधं

सहेते न किं देवसेनाधिनाथ ।

अहं चातिबालो भवान् लोकतातः

क्षमस्वापराधं समस्तं महेश ||

ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராத

ம்ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத |அஹம் சாதிபாலோ வான் லோதாத: க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச

இந்த ஸ்லோகத்தில் முருகனை தன்னுடைய அப்பா அம்மாவாக நினைச்சு ஆச்சார்யாள் சரணாகதி பன்றார்.
.
‘ஹே தேவசேனாதி நாதா’தேவர்களுடைய சேனைக்கு அதிபதியே.

ஜநித்ரீ’ – அம்மாவோ,

 ‘பிதாச’ – அப்பாவோ,

 ‘ஸ்வபுத்ராபராதம்’ – தன் குழந்தைகள் செய்த அபராதத்தை , 

‘ஸஹேதே ந கிம்’ – பொறுத்துக்கிறது இல்லையா? 

 ‘ததா’ – அப்படியே ,

 ‘அஹம் சாதிபால:’ – நானோ ரொம்ப சின்னக் குழந்தை,

 ‘பவான் லோக தாத:’ – நீங்கள் உலகத்துக்கே அப்பா ,

‘ஹே மஹேச’ – பரமேஸ்வரா,

ஸமஸ்தம் அபராதம் க்ஷமஸ்வா’ – என்னுடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக் கொள்ளுங்கள் 

இந்த பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் ‘அம்மையும் அப்பனுமாக’ இருக்கா. அவா இரண்டு பேருமே ஆச்சார்யாளுக்கு இந்த முருகப் பெருமான் கிட்டேயே தெரியுறதுனால, ‘முருகப் பெருமானே! நீயே என்னுடைய அம்மை அப்பன் ‘ ன்னு சொல்லி, ‘உங்கிட்ட நான் வேண்டிக்கிறேன். என்னுடைய பிழைகளைப் பொறுத்து எனக்கு அநுக்கிரஹம் பண்ணு’ அப்படின்னு சொல்றார்.

பகவானை அம்மை அப்பனா பார்த்து அவா பண்ண அநுக்கிரஹத்த நினைக்கிறது நிறைய மகான்கள் பண்ணி இருக்கா.

 திருவாசகத்துல நிறைய அந்த மாதிரி பாடல்கள் வரும்.

"அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே! பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?"

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆயதேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!"

இராமலிங்க அடிகளார் இந்த மாதிரி ‘அம்மையே அப்பா’ன்னு பாடியிருக்கார். 

"தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்."

(திருவருட்பா: ‘அருட்ஜோதி நிலை’)

“தடித்தஓர் மகனைத் தந்தை 
ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்பொடித் திருமேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னைஅடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப்பா இனி ஆற்றேன்.”(திருவருட்பா: ‘பிள்ளைச் சிறு விண்ணப்பம்’)
அருணகிரி நாதரும் கந்தர் அநுபூதியில,

"எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே."  என்று போற்றுகிறார்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ 

No comments:

Post a Comment