Monday 11 November 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 29



                                                                                                                                                     சுப்ரமண்ய புஜங்கம்....  29   



                                                                                       
                                                                                                                                                                           

முருகப் பெருமானுடைய  கையில இருக்கிற வேலுடைய மஹிமை.

मृगाः पक्षिणो दंशका ये च दुष्टा-

स्तथा व्याधयो बाधका ये मदङ्गे ।

भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे

विनश्यन्तु ते चूर्णितक्रौञ्जशैल ॥ २९॥

ம்ருகா: பக்ஷிணோ தம்சகா யே ச துஷ்டா:

ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |

பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா: ஸுதூரே

விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல ||


அன்பரின் விளக்க உரை 

க்ரெளஞ்ச மலையை வேலால் பொடிப் பொடியாக ஆக்கியவரேன்னு கூப்பிட்டு


 ‘மதங்கே’ என்னுடைய உடம்பில்  

‘யே’ – எந்த கஷ்டங்கள் – பலவிதமான உடம்புக்கு வரக் கூடிய ஆபத்துக்களை சொல்றார். 

‘ம்ருகா:’ – கொடிய மிருகங்களால் கஷ்டம் வரலாம்,

 ‘பக்ஷிண:’ – தீடிர்னு ஏதாவது பக்ஷி வந்து தாக்கலாம்.

 ‘தம்சகா:’ –  பலவிதமான பூச்சிகள், கொசுக்கள் அதெல்லாம் வந்து கடிக்கலாம். 

‘ததா’ – அப்படியே, 

‘துஷ்டா: வ்யாதய:’ – ரொம்ப கஷ்டப் படுத்தக் கூடிய வ்யாதிகள்

 ‘பாதகா:’ – இதெல்லாம் என்னை  ஹிம்சை பண்றது. அவற்றையெல்லாம்

 ‘பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா:’ 

உன்னுடைய சக்தி ஆயுதம், உன்னுடைய வேலாயுதத்தைக் கொண்டு, அது தீக்ஷ்ணமா இருக்கு. கூராக  இருக்கு. அதை வெச்சு நீ மலையையே பிளந்தாய். இந்த வ்யாதிகள் மாதிரி எனக்கு வர கூடிய கஷ்டங்களை எல்லாம், அந்த வேலின் கூர் முனையால வெட்டி போட்டுடு. 

‘ஸுதூரே விநச்யந்து’ – அதையெல்லாம் எங்கேயோ தூரத்துல கொண்டு போய் தள்ளி நாசம் பண்ணிடு. 

அப்படி அந்த ஸுப்ரமண்ய ஸ்வாமியோட வேலை வெச்சுண்டு பூஜை பண்றவாளுக்கு எந்த ஒரு கஷ்டமும் அண்டாதுங்கற ஸ்லோகம்..

வேலைப் பத்தி வரக்கூடிய கந்தர் அலங்கார பாடல்கள்.


தேர் அணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் வேல்
கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்
பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே

தேரை அலங்கரித்துச் செலுத்தி, [‘ஆணவம்-மாயை-கன்மம்’ என்னும்] மூன்று கோட்டைகளைத் [தம் திருப்பார்வையினாலேயே] எரித்து அருளிய சிவபெருமானுடைய திருக்குமாரர் திருமுருகப்பெருமானின் சிவந்த கையில் உள்ள கூர்மையான வேலாயுதத்தால் தைக்கப்பட்ட கிரௌஞ்ச மலையானது அணு அணுவாக துகள்பட்டு அழிந்தது. ஆரம்பத்தில் நேராக அணி வகுத்து வந்து பின்னர் வட்ட வடிவில் வளைந்து கொண்ட அசுரர்களின் சேனை தளர்ந்து ஓடியது; சூரபன்மனுடைய பெரிய நடுச்சேனையும் அழிந்தது. தேவர்களின் உலகமான அமராவதியும் அசுரர்களிடமிருந்து உய்வு பெற்றது.


பாலென்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்
சேலென்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேலென்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்
காலென்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.

பாலை ஒத்தது [பெண்களின்] சொல், பஞ்சை ஒத்தது பாதம், கண்கள் கெண்டை மீனை ஒத்தவை என்று எண்ணி மயங்கித் திரிகின்ற மனமாகிய நீ, திருச்செந்தூர்த் திருமுருகப்பெருமானின் திருக்கையில் விளங்கும் வேலாயுதமே என்று சொல்கின்றாயில்லை; வெற்றி பொருந்திய மயில் என்றும் சொல்கின்றாயில்லை; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்கின்றாயில்லை. [ஆதலால்] நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனமோ?


கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண்டெனக் கொட்டியாட வெஞ்சூர்க் கொன்ற ராவுத்தனே.

கற்கண்டைப் போன்ற சொற்களையுடையவரும் மென்மையானவருமான பெண்களின் காமப் புணர்ச்சியாகிய மதுவினை நிரம்பவும் மொண்டு குடித்து அவ்வெறியால் அறிவு மயங்கினாலும் தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் ‘டுண்டுண் டுடுடுடு …’ என்னும் ஒலியை உண்டாக்கிக் கொண்டு பறையடித்துக்கொண்டு கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனைக் கொன்று அருளிய சேவகனே.


 ‘வேல் வகுப்பில் 

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்

வள்ளியம்மையோட கண்கள் வேல் மாதிரி இருக்குன்னு சாதாரண அர்த்தம் சொல்லலாம். வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் இதுக்கு விசேஷமா அர்த்தம் சொல்லி இருக்கார். இந்த ‘பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ்’ ங்கறதுக்கு, அம்பாள் பண்ணக்கூடிய அஞ்சு காரியங்கள் ‘ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்ரஹம்’ அப்படின்னு அர்த்தம் சொல்லி இருக்கார். மேலும் எப்படி அம்பாளோட கடாக்ஷம் அனுக்ரஹம் பண்ணுமோ, அந்த மாதிரி வேல் அனுக்ரஹம் பண்ணும் அப்படின்னு அவ்வளவு அழகா சொல்லி இருக்கார்.


தருக்கி நமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்கு நிகராகும்

‘தருக்கிநமன் முருக்கவரின்’ – எமன் எருமை மாட்டு மேல ரொம்ப கர்வத்தோட வந்து பாசக் கயிறைப் போட்டு முறுக்கும் போது, மார்க்கண்டேயன் கழுத்துல பாசக் கயிறு போட வந்த போது, ‘எருக்கு, மதி’ இதெல்லாம் தலையில வச்சிண்டு இருக்கற சிவபெருமானுடைய கழல் என்ன பண்ணித்தோ,அதை இந்த வேல் பண்ணும் அப்படின்னு சொல்றார். அதற்கு நிகரான காரியத்தை செய்யும்.


‘தனித்துவழி நடக்குமென திடத்துமொருவலத்தும்
இருபுறத்தும் அருகடுத்திரவு பகற்றுணையதாகும்

தனியா போயிண்டிருக்கும் போது, ‘தனித்து வழி நடக்கும் எனது ஒரு இடத்தும். ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையதாகும்’ 

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே’

  இதெல்லாம் மஹாமந்திரங்கள்..  

அப்படி ‘வேல்’ங்கறது பயத்தைப் போக்கும். மிருகங்கள் கிட்ட இருந்தோ, வியாதியில் இருந்தோ நமக்கு வர்ற பயத்தை போக்கறதுக்கு ‘வேல் வழிபாடு’ உற்ற வழி, அப்படின்னு ஆச்சார்யாளும் சொல்லியிருக்கார். அருணகிரிநாதரும் நிறைய சொல்லியிருக்கார்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

No comments:

Post a Comment