Thursday 27 July 2017

அபிராமி அந்தாதி வரிசை 12

                                                                          அபிராமி அந்தாதி  வரிசை  12                                                                                                     


கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன் செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!



தொடர்ந்து விளக்கவுரை அளித்து வருபவர் சென்னை அன்பர் நீலா குமார் அவர்கள் 


(பல அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  சொல்கிறோம்)

கண்ணியது உன் புகழ் 

நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்

கற்பது உன் நாமம் 

நான் எப்போதும் கற்பது உன் நாமம்

அன்னையின் நாமங்கள் தக்க ஞானாசிரியரால் உபதேசிக்கப்பட்டு நம்மால் கற்கப்பட்டு, அதை நாம் கசடற ஓத வேண்டும். கற்கப்படுபவை திருநாமங்கள். அன்னை பராசக்தியானவள் நான்கோயில் கொண்டுள்ள ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வவொருதிருநாமம் பூண்டு ஒழுகுகிறாள். அவள் ஆயிரம் பேர் உடையவள். அத்திரு நாமங்களை கற்று ஓத வேண்டும். ஒவ்வொரு நாமாவிற்கும் ஒரு தத்துவம் உண்டு. ஒரு பிரபாவமும் உண்டு. மேலும் தேவி வழிபாட்டில் நாம பாராயணம் முக்கிய அங்கம் வகிக்கின்றது. அந்நாமாக்களை நாம் பாராயணம் செய்தால், அம்மை அவற்றைக் கேட்டுத் தன்னை அழைத்ததாக எண்ணி மகிழ்ந்து உதவ ஓடோடி வருவாள்."கற்க, கசடு அற" என்றார் திருவள்ளுவர். எல்லாக் கசடுகளையும் அறவே நீக்குவது அவள் நாமமே அல்லவா? அதனாலும், "கற்பதுன் நாமம்" என்றார் பட்டர்.
 ஏன்னா பாபங்களே நிறைந்தும், தர்மானுஷ்டானங்கள் குறைந்தும் இருக்கும் கலியுகத்தில் மனிதர்களுக்கு நாமஸங்கீர்த்தனத்தைத் தவிர வேறு கதியொன்றும் இல்லை. இதைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமமும் நமக்கு சொல்கிறது 

555. கலிகல்மஷ நாஸினி - கலிதோஷத்தைப் போக்குபவள்.
, நாமஸ்மரணம், மனதைக் கட்டுக்குள் வைக்கும். அன்னையை அறிய, முதலில் அவளது நாமத்தை விடாது தியானம் செய்ய வேண்டும். “அம்மா, உனது சிவந்த மேனியை எனது நெஞ்சில் வைத்து, உனது நாமத்தை இடைவிடாது தியானித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.

கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் 

 என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில் (அம்புயம் - அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு; அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்த மலர் அம்புஜம்)

மனம் குழைந்து பக்தி பண்ணி நான் ஈன் திருவடித் தாமரைகளையே வழிபடுகின்றேன். கசிந்து பக்தி பண்ணும் போது மெய் புளகிக்கும். கண்களில் நீர் அரும்பும். வாய் குழறும். ' உளறினேன் அலறினேன் விண்மாரி பெய்ய இரு கண்மாரி பெய்யவே யர்ந்தேன்' என்பார் தாயுமானவர்.
ஒரு பொருளின் மீது நமக்கு ஆர்வம் உண்டாகுமானால், முதலில் அப்பொருளின் பெருமையை நாம் நன்றாக உணர்ந்திருக்க வேண்டும். முதலில் அம்பாளின் பிரபாவத்தை அறிந்து, அதில் ஆர்வம் கொள்ளவேண்டும். கொண்ட பின்னர், அம்பிகையின் திருமந்திர உபதேசம் பெறவேண்டும். அடுத்த கட்டம் மூன்றாவதான ' உபாசனை ' முறை : உபாசனை நிலைக்க சத்சங்கம் அவசியம்.
அவர், உள்ளம் எல்லாம் உருகி பக்தி பண்ணுகிறார். பக்தி பண்ணுகிறபோது அம்மையின் இரு பதாம்புயங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறார். கசிந்து மல்கி அதனையே எண்ணுகிறார். 

பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து 

நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன் தான் நான் எப்போதும் இருக்கிறேன்.இந்த உலகில் கடைத்தேற வேண்டுமென்றால்நல்லோர் கூட்டுறவு வேண்டும் . 

உலகில் கடைத்தேற, தேவியின் தியானம் இருந்தால் மட்டும் போதாது. இந்த மனது பிய்த்துக்கொண்டு ஓடி, கண்ட விஷய சுகங்களிலும் ஈடுபடும் இயல்புடையது. அப்போதெல்லாம், அந்த அம்பிகையின் பக்தர் குழாத்தின் சங்கம், கூட்டுறவு நமக்கு இருந்தால், அந்த சங்க மகிமையால் நமது உள்ளம் பண்படும். அவர்கள் அன்னையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், நமது மனமும், விஷய சுகம் நீக்கி, அன்னையின் அழகினிலே, அவளது பாதாரவிந்தங்களிலே ஈடுபடும்.

அம்மையின் பதங்கள் வேண்டுமென்றால், அந்த பாத தூளிகள் கிடைக்கபெற்ற அடியாரின் அனுக்ரஹமும் வேண்டுமல்லவா? அதனால், அம்மையின் ஆசி பெற்றவர்களை நாடித் தேடிச் சென்று அடைந்து இன்புறுகிறார் பட்டர். அந்த அம்மையை நினைத்து உருகுபவர்களை முதலில் அண்டிப் பேணி பயன் பெருகிறார்.
சத்சங்கத்வே நிச்சங்கத்வம்"என்று சங்கரர் கூறியது போல, தனிமையும், அந்த தனிமையினால் விளையும் தவமும் கை வர வேண்டுமென்றால், முதலில் நல்லடியார் கூட்டம் தனில் சேர வேண்டும

நான் முன் செய்த புண்ணியம் ஏது என் அம்மே! 

"நான் முன்பு என்னபுண்ணியம் செய்தேனோ? சிவனை நினைத்துஇப்பிறவியில் வணங்கும் பேற்றியனுக்கு ' என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே ' - என்பார் திருஞான சம்பந்தர்.

 இறைவியை இப்போது வணங்க முற்பிறவிகளில் புண்ணியம் பல செய்திருக்க வேண்டும் என்பது கருத்து. புண்யலப்யா ( லலிதா சகஸ்ரநாமம் 543) - புண்ணியத்தால் அடையத்தக்கவள் அவள்.
நான்முன் செய்த புண்ணியம் ஏது! என் அம்மே! என்று அபிராமபட்டர் மிக உருக்கமாக அன்னையிடம் கேட்கிறார். 

இதனையே ஆதிசங்கரர், தனது ஸௌந்தர்ய லஹரீயில் முதல் ஸ்லோகத்தில், " ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத- புண்ய: ப்ரபவதி" என்று கேட்கிறார்.அதாவது "புண்ணியம் செய்யாதவன் உன்னை வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எங்ஙம் தகுதியுடையவனாவான்?"
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பெருமான். இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால், மனம் நெகிழ வேண்டும். கல்லின் மேல் எப்படி திருவடி பதியும் ?
இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் என்ன புண்ணியம் செய்தேன்? இந்த பிறவி எடுத்த பின் பெரிதாய் ஒன்றும் புண்ணியம் செய்து விடவில்லை. இதற்க்கு முன்னால் இருந்த பிறவிகளில் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்.

ஒருவனுக்கு இறை பக்தி ஏற்படுவதற்கு அவனது பூர்வ புண்ணியமே காரணம். அது இல்லாதவர்களுக்கு யார் எப்படி கற்றுக்கொடுத்தாலும் கடவுள் பக்தி ஏற்படுவது இல்லை.

 பக்தியால் வாழ்வின் சோதனைகள் பலவற்றை எதிர்கொள்ள முடியும் வாழ்நாள் முழுவதும் பக்தி செய்து இறைவனை வழிபட்டு வருபவர்கள் இறக்கும் தருவாயில் தெய்வீக காட்சிகளையே தரிசனம் செய்வர். அதனால் சிறிதும் அச்சமின்றி, வெள்ளரிப்பழம் தன் கொடியிலிருந்து எவ்வாறு பழத்திற்கு யாதொரு பாதகமின்றி பிரிந்து கொள்கிறதோ, அவ்வாறு பக்குவ நிலையடைந்து இறைவனைச் சென்றடைகின்றனர். 

 பக்தி இல்லாதவர்கள் சாகும் தருவாயில் பல விபரீதமான தோற்றங்களை கண்டு அஞ்சியும் அரற்றியும் பிதற்றியும் துன்புறுகின்றனர்.

புவி ஏழையும் பூத்தவளே - ஏழு உலகையும் பெற்றவளே.

ஒரு பூ மலர்வதைப் போல், இந்த ஏழு உலகங்களையும் மலரவைத்தவளே, என் தாயே என்று கரைகிறார் பட்டர்
நான் நெஞ்சில் கருதியது உன் திருப்புகழே என்றார். '

இப்படித் தம்மால் சிந்திக்க முடிந்தது தமது செயலா? சிந்தித்து பார்க்கிறார் பட்டர். இல்லை. இது அவள் கருணை தான். அவள் கருணை இருப்பதனால் தானே அவளைப் பற்றி சிந்திக்க முடிந்தது? அதனால், இந்த சிந்தனை தமக்கு வரக் காரணம், முன் வினைப் பயனே, அந்த அபிராமியின் அருளே என்று சொல்கிறார் பட்டர். "அவன் அருளாலே அவன் தாள் பணிந்து" என்று சொல்வது போல, அந்த அன்னையின் அருளினாலேதான் அவள் தாள் பணியவும் முடிகிறது என்று உணர்ந்து பாடுகிறார் அவர். இப்படி, என் மேல் கருணை கொண்டு, என்னை ஆண்டு அருளும் தயா பரியே, என் அம்மையே, புவி ஏழினையும் படைத்த தாயே, தயா நிதியே என்று பாடுகிறார்.

இப்படி, அன்னையின் திருவடிகளைத் தாங்கியும், அன்னையின் நாமத்தை விடாது தியானம் செய்தும், அவலது அடியாருடன் கூடி இருந்தும், அவளது ஆகம வழி சென்றும் அவளை வழிபடுவதாக அபிராமி பட்டர் கூறும் இந்த வழிகளில் நாமும் சென்று, அந்த அபிராமி அன்னையின் அருளைப் பெறுவோம்.
அபிராமி சரணம் சரணம்!!



                                                        பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 


                                                                                             


                                                           Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                              https://youtu.be/OugF6Mi6JiQ



                                                                    அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                            

                                                                Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  

                                                https://youtu.be/Yx7EP2cZLV0
  


                                                   முருகா சரணம் 

No comments:

Post a Comment