Monday 31 December 2012

தேஹு ரோடு வழிபாடு


புனேவுக்கு அருகில் உள்ள தேஹு ரோடு  பகுதியில்  பக்த துக்காராம் அவதரித்து விட்டல் மேல் பல பாடல்கள் பக்தி பரவசத்துடன் பாடி  ஆலந்தி என்ற இடத்தில் உயிருடன் சமாதியானார். மனித சரீரத்துடன் நேராக வைகுண்டம் பயணமானார் என்று நம்பப்படுகிறது.அந்த பகுதியில் தான் இன்று நம் முருகப்பெருமான் குன்று தோர் ஆடும் குமரனாக அருள்பாலிக்கிறான்.

குறிப்பாக .இராணுவத்தினர் சேவையில் உருவானது தான் முருகன் உறையும் ஆலயம்.அந்த ஆலயத்தில் தான்  அவன் கட்டளைப்படி கடந்த ஆறு ஆண்டுகளாக  டிசம்பர்  25ந்தேதி நம் வழிபாடு  நடை பெற்று வருகிறது.அதற்கு மூல காரணம் அமரர் முரளி தான். இந்த ஆண்டு கனத்த இதயத்துடன் தான் அன்பர்கள் கலந்து கொண்டார்கள். கந்தசஷ்டி கவசம்,ஷண்முக கவசம் சுப்பிரமணிய கவசம்,ஸ்கந்தகுரு கவசம் போன்ற கவசங்களை முன்பே சூடியுள்ள நம் பெருமான் அன்று தங்க கவசத்தையும் அணிந்து ஜகஜ்ஜோதியாக காட்சி அளித்து அருள் பாலித்தான்..

மும்பையிலிருந்து பெருமளவில் அன்பர்கள் கடமை உணர்வுடனும்,மிகுந்த ஈடுபாட்டுடனும்   கலந்து கொண்டது கோயில் நிர்வாகிகளுக்கு   பெருமகழ்ச்சி  அளித்தது.பெங்களூர் அன்பர் ஸ்ரீநிவாசன் கடலூரிலிருந்து மற்றொரு அன்பர் கலந்து கொண்டனர்.சிறப்பு அம்சமாக செம்பூர் அன்பர் திரு .ராதாகிருஷ்ணன் தேஹுரோட்  முருகன் மேல் தொடுத்த அருள் பாமாலையை  முருகன் பாதக்கமலங்களில் சமர்ப்பித்து  குரு பாலு சாருக்கு அளித்தார்.அன்பர் தம் பாமாலையை பக்தியுடன் வாசிக்கும்போது அன்பர்கள் பொருள் உணர்ந்து அனுபவித்து பரவசமானார்கள்.பாமாலையை இத்துடன் இணைத்துள்ளோம்.கவிதை நயத்தோடு  காப்பு,குருவணக்கம்,நூல்,பலன் என்ற முறையோடு சம்பிரதாயமாக அமைத்தது மிக அழகாக இருந்தது.முருகன் அருளால் மேன் மேலும் பல பாமாலைகளை சூட்டுவார் என்பது திண்ணம்.

அன்புடையீர், தெஹு ரோடு முருகனின்  பாடல் இதோ.

காப்பு 

தாயாய்  உருவெடுத்து தண்டமிழ்த் தேன் பாலூட்டி 
சேயாய்  எனை அணைத்து  சீரிணக்கம் செய்வித்து 
மாயாப் பிறவிதனை மாற்றழிக்க நெறிசெய்தென் 
ஆயாகி நின்றானை ஐங்கரனை வாழ்த்துவனே //            1.

குருவணக்கம் 

வால  வயதினிலே நல்லதமிழ் பயிற்றுவித்து 
சால சீர்செய்த சற்குருமார் பொற்பதமும் 
சீல மிகு குருஜி இராகவனின் வழிநடத்தும் 
பாலமணி ராஜி பதமும் பணிவேனே                               2.

நூல் 

தலம் பலவும் சென்றுநான் சேவித்தேன் -ஆறுபடைத் 
தலம் பலவும் கண்குளிரக் கண்டுகொண்டேன் என்றன்மனம்
பலம்பெறவே கைதொழுது  நிற்கின்றேன்  நற்றேவர் 
நலம்  பரவும் சந்நிதியே தேஹுரோடின் நாயகனே //                  3.

பார் காக்கும் காவலனின் பன்னிருகைக் கோமகனின் 
சீர்போற்றி நல்லடியார் பாடிமகிழ் வேளையிலே 
கார்போல் கருணைமழை பொழிவித்து எங்கள் மனத் 
தேர்மேல் வலம் வருவாய் தேஹுரோடின் நாயகனே //             4.

புவிநாடி வலம்வரு நல புள்ளிமயில் வாகனனைக் 
கவிபாடிச்  சிறு துதியால் வணங்குகிறேன் பார்புகழும் 
தவஞானியார் பலரும் தொழுதேத்தும் பெருங்கோவே 
சிவஞானம் தெளிவிப்பாய் தேஹுரோடின் நாயகனே   //           5.

பூவினுளே சிறப்புளது புண்டரிகம் செம்மைதமிழ்ப் 
பாவினுளே பொற்புளது அருணகிரி திருப்புகழே - என்றன் 
நாவினுளே நின்றுளது நல்லடியார் பாதமலர் 
தேவருளே தேவன் நீ  தேஹுரோடின் நாயகனே   //                     6.

இருமலிலும் சருமலிலும்  காய்ந்து  எந்தன் உளம அலையும் 
பொருமலையும் பெருமலையும் போக்கி அருள்புரிவாய் - வான் 
தருமலையும் தனிமலையும் சேர்ந்தணைந்த இப்புவியில் 
திருமலை போல் தொல்மலிசீர்த் தேஹுரோடின் நாயகனே //      7.

பலன் 

அண்டமெலாம் தொழுதேத்தும்   தேஹுரோடின் நாயகனைத் 
தெண்டனிடு வோர்க்குச் சித்திக்கும் சிவபதமே 
மண்டு துயரிலா வாழ்வும் மாண்பு திருசேர்  வாழ்வும் 
பெண்டுபிள்ளை யுடன்வாழ்வும் மகிழ்வோடு  பெறுவாரே //          8.



வழிபாடு முடிந்தபின் நிர்வாகிகள் சமீபத்தில் நிறுவிய  தேரில் முருகனை அமர்த்தி அன்பர்களுக்கு தரிசனம் செய்வித்தார்கள்.தேரோடும் வைபவம் மாலையில் ஏற்பாடு ஆகியிருந்ததால் அன்பர்களின் தேர் இழுக்கும் விருப்பம் நிறைவேற வில்லையே என்ற ஏக்கம் வெளிப்பட்டது.அடுத்த வழிபாடு  சமயத்தில் தங்கத்தேரையே இழுக்கும் பாக்கியம் அருள பெருமானை வேண்டுவோம்.நிர்வாகிகள் படிவிழா போன்ற மற்ற நிகழ்சிகளுக்கும் அழைப்பு  விடுத்தார்கள்.கலந்து கொள்வது நம் கடமை.

அதற்கு முன் 26-01-2013 அன்று அமைந்துள்ள நம் படிவிழா நிகழ்ச்சியில்  பெருமளவில்  கலந்து கொள்ள புனே அன்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

2 comments:

  1. S.KRISHNAMOORTY THANE1 January 2013 at 22:19

    தித்திக்கும் தீந் தமிழ் திருப்புகழுடன் திகட்டாத தேஹூர் முருகன் அருட் பா மாலையிலும் திளைத்த திருப்புகழ் அன்பர்கள் பெற்ற பேறுதான் என்னே!
    S,KRISHNAMOORTHY THANE

    ReplyDelete
  2. அன்பர் ராதாக்ருஷ்ணனின் அருட் பாமாலையை தேஹு ரோடு முருகன் வளாகத்தில் தக்க இடத்தில் தக்க முறையில் மற்ற அன்பர்களின் பார்வைக்காக பதியுமாறு கோயில் நிர்வாகிகளை பணிவண்புடன் வேண்டுகிறேன். சு.வெங்கடராமன்.மும்பை.

    ReplyDelete