Friday 22 February 2019

அபிராமி அந்தாதி - 38


                                                            அபிராமி அந்தாதி - 38
                                                                           
                                                                                     


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

இந்தப் பாடலில் அபிராமபட்டர் இரண்டு விவரங்கள் தருகிறார். ஒன்று சிவபெருமான் அம்பிகையிடம் எவ்வாறு மயங்கினார் என்பது. இரண்டாவது இந்திர உலகம் ஆளும் ஆசை இருந்தால், அவளைப் பணிவதே அதற்கு வழி என்பது.

சிவனுக்கே போகம் அருளும் எம்பெருமாட்டி, அவளைப் பணிவோருக்கு ( இந்திரன் அருளும்) அமராவதியை ஆளும் உயர்ந்த தேவலோகப் பதவியைத் தருவாள். ( இந்திரன் அனுபவிக்கும் போகம் தான்- போகத்தின் எல்லை).

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் - பவளக் கொடியில் பழுத்த பவளம் போல் இருக்கும் செவ்விதழ்களும்

பனி முறுவல் தவளத் திருநகையும் - குளிர்ந்த முறுவலும் முத்து போன்ற பற்கள் தெரிய செய்யும் புன்னகையும்
எவ்வாறான புன்முறுவல் அது? " பவளக் கொடியிற் பழுத்த செவ்வாய்? " - அன்னையின் திருஉதடுகள் பவளக் கொடியை விடச் சிவந்து உள்ளன. செக்கச் செவேல் என்ற அரிய வண்ணம் கொண்ட இதழ்கள் அவை. பவளக் கொடியின் மேல் இதழும் கீழ் இதழுமாய் இரண்டு இதழ்களும் சற்றுப் பிரிகின்றன. அவ்வாறு பிரிகையில் செம்பவள இதழ்களுக்குள்ளேயிருந்து, வெண் முத்துக்கள் போன்ற பற்கள் பளிச்சிடுகின்றன. அம்மை புன்முறுவல் பூத்துக் குறுநகை புரிகின்றாள். சிவந்த இதழ்களின் இடையே வேண்முத்துப் பற்கள் தெரியும் வண்ணம், அம்பிகை குறுநகை புரிகின்றாள்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் கூட அன்னையை எப்படியெல்லாம் வர்ணிக்கறது பாருங்கோ!!
( 24) நவ வித்ரும்பிம்ப ஸ்ரீ ந்யக்காரி தசனச்சதா செம்மையான பொருள்களில் சிறந்ததான பவழம். கோவைப்பழம்இவற்றின் காந்தியை வெல்லும்படியான சிறந்த சிவந்த அதரங்கள் அன்னைக்கு. ( ரதனச்சதா என்றும் பாடமுண்டு. அர்த்தம் அதே....).
25. சுத்த வித்யாங்குரகார த்விஜ பங்க்த்தி த்வயோஜ்வலா - சுத்தவித்யையின் முளைகள் போன்ற இரு பல்வரிசைகளால் ஒளிமிக்க தோற்றமுடையவள். 242. சாருஹாஸா - அழகிய புன்சிரிப்போடு கூடியவள்.' உன் இனிய புன்சிரிப்பே சந்திரன்.
28. மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேச மானஸா - தனது புன்சிரிப்பின் ப்ரவாஹத்தில் காமேசுவரருடைய மனதை மூழ்கச் செய்தவள். ஸ்மித - புன்சிரிப்பு - பற்கள் வெளித் தெரியாமல் மெல்லச் சிரிப்பது. ' மந்தஸ்மித ' - இன்னும் விசேஷமான மென்மையானது. அம்பிகையின் புன்சிரிப்பிற்கு ' மூககவி ' - ' மந்தஸ்மிக சதகம் ' என்ற நூறு பாடல்கள் கொண்ட நூலை செய்திருக்கிறார்.

துணையா -
துணையாகக் கொண்டு
எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது - துவண்டு போகும்படி போரிட்டு

துடியிடை சாய்க்கும் - உடுக்கையைப் போன்ற இடையை கீழே சாய்க்கும்

துணை முலையாள் - ஒன்றிற்கு ஒன்று துணையான முலைகளை உடையவள்


' குறுநகை ' இப்போது போர்க்கலன் ஆகின்றது. அன்னை உட்கார்ந்தபடியே, சிரிப்பு என்ற படைகலனைத் துணையாகக் கொண்டு, பரமேசுரனைத் துவள வைக்கின்றாள். இரண்டாம் போர்க்கலனையும் அன்னை தன்னிடம் கொண்டிருக்கின்றாள். அது அன்னையின் கொடி போன்ற மெல்லிய இடை: சாயும் படியாகக் நகில் பாரங்கள். ஆக, நகையையும் நகிலையும் அம்பிகை துணையாகக் கொண்டு சிவனாரை வெல்கிறாள்.


(ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்)
36. ஸ்தன பார தலன் மத்யபட்டபந்த. வளித்ரயா -.ஸ்தனங்களின் சுமையினால் முறிந்து போய்விடுமோ என்று தோன்றக் கூடிய இடுப்புக்குப் பட்டை கட்டியது போன்று அமைந்துள்ள மூன்று மடிப்புகளை உடையவள்.உத்தம ஜாதி ஸ்திரீ புருஷர்களுக்கு நெற்றியிலும், கழுத்திலும், வயிற்றிலும் மூன்று கோடுகள் போன்ற மடிப்புகள் இருக்கும் என்று ஸாமுத்ரிகா சாஸ்த்ரம் கூறும் லட்சணம். அவை மகத்தான ஸௌபாக்கியத்திற்கு அடையாளம்.
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - " அமராவதி என்னும் இந்திரநகர் ஆளும் தன்மை ஏற்பட வேண்டுமா? பணியுங்கள் பரமேட்டியை "

அவளை எவ்வாறு பணிவது? ஓர் உருவம் தருகிறார். அந்த உருவத்தை வைத்து வழிபாடு செய்தால், அமராவதி ஆளும் உரிமை கிட்டும் என்று குறிப்பிட்டார். அது பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் தவளத் திருநகையும், துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையும் கொண்ட உருவம்.


                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்


                                                                                          
                                                        அபிராமி சரணம் சரணம்!!

                                                              முருகா சரணம் 


U Tubes published  by us are available in the following link

No comments:

Post a Comment