Wednesday 6 February 2019

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம்






ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் – நோய்கள் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே


ஸுப்ரமண்ய புஜங்கத்துல 23வது ஸ்லோகத்துலயும், 24வது ஸ்லோகத்துலயும், ‘என்னுடைய மனக் கவலைகள், மனோ வியாதிகளை எல்லாம் போக்கணும் முருகா’ன்னு வேண்டிண்டார். இன்னிக்கு 25வது ஸ்லோகம்.
अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த: |
பிஷாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே ||


இங்கு முக்கியமாக திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் பெருமையை விளக்குகிறார்.


    தாரகாரே= தாரகனை  வதைத்தவனே,

 மஹாந்தஹ அபஸ்மாரம்= பல பெரிய வியாதிகள், குஷ்டம் க்ஷயம், 

அர்ஷ ப்ரமேஹ= மூலம் சரக்கரை வியாதி, 

ஜ்வர உன்மாத= சுரம் மனவியாதி,

 குல்மாதி ரோகாஹா= குன்மம் போன்ற நோய்கள்,

 ஸர்வே பிஷாசாஹாசஹ, = பல பில்லி சூனியம் போன்ற  வியாதிகள்,  

பவத் பத்ர பூதிம்= உன்னுடைய பன்னீர் இலையில் வைக்கப் பட்டுள்ள விபூதியை, 

விலோக்ய= பார்த்தவுடனே, 

க்ஷணாத் த்ரவன்தே= ஒரு நொடியில் ஓடிவிடுகின்றன. 

உரை ஆசிரியரின் விளக்கம் 

அபஸ்மாரம், குஷ்டம், க்ஷயார்சம், ப்ரமேஹம், ஜ்வரம்,குல்மாதி ரோகா,வலிப்பு, குஷ்டம், க்ஷயம், சுவாச ரோகம், மேஹ ரோகம், ஜ்வரம், சித்த பிராந்தி, வயிற்று வலி இப்படிப் பல விதமான வியாதிகள் உடம்பைப் படுத்தறது.அப்படிஉடம்புக்கு வர்ற வியாதிகளை எல்லாம் போக்கிக்கிறதுக்கு ஒரு உபாயம் இருக்கு. 
‘பவத் பத்ர பூதிம் விலோக்ய’ இந்த பத்ர பூதியைக் கண்ணால பார்த்த மாத்திரத்திலேயே பூத ப்ரேத பிசாசங்கள், ப்ரம்ம ராக்ஷசர்கள், இன்னும் எல்லா வியாதிகளும், ஒரு க்ஷணத்தில் ஓடி மறைந்து விடுகின்றன. ‘க்ஷணாத் த்ரவந்தே ‘ ன்னு சொல்றார். அந்த பன்னீர் இலைல வச்சு கொடுக்கற விபூதிக்கு அவ்வளவு மகிமை. 
வேதங்கள் எல்லாம் சேர்ந்து தங்களுடைய ‘ஸுமனஸ்’னால அழகழகான வாசனைப் புஷ்பங்களை எல்லாம் முருகனுடைய பாதத்துல போடணும்ன்னு ஆசைப் பட்டு ஒரு வ்ருக்ஷ ரூபமா ஸ்வாமி சன்னிதியில வந்து இருக்காம். அதைத்தான் பன்னீர் வ்ருக்ஷம்ன்னு சொல்றா. அந்த பன்னீர் வ்ருக்ஷத்தோட கிளைகள் எல்லாம் வேத சாகைகள். அந்த வ்ருக்ஷத்தோட இலைகள் எல்லாம் வைதீக மந்திரங்கள். 

அந்த வைதீக மந்திரத்தில ப்ரணவ ஸ்வரூபமாகிய ஸ்வாமி சம்பந்தப்பட்ட விபூதியை வச்சு கொடுக்கறாதனால, அதை நாம இட்டுண்டா எல்லா உபாதைகளும் போய்டறது. ரொம்ப ஆரோக்யத்தோட தீர்க்காயுசா இருப்பா அப்படின்னு சொல்றார்.
தேதியூர் சாஸ்த்ரிகள், புராணத்திலிருந்து எடுத்து இன்னொரு கதையும் சொல்லியிருக்கார். விஷ்வாமித்ர மஹரிஷி ராமச்சந்திர மூர்த்தியைக் கூட்டிண்டுகாட்டுக்குப் போகும் போது தாடகா வதம் பண்ணுன்னு சொல்லி காரணமாக  இருந்தார்.  அதாவது ஒரு கார்யம் பண்ணுன்னு தூண்டி விடறது. ஒரு ஸ்தீரி வதம் பண்றதுக்கு தூண்டி விட்டதனால அவருக்கு உடம்புக்கு வந்துடுத்து. அவர் எத்தனையோ முயற்சி பண்ணினார். அஸ்வினி தேவர்களாலக் கூட அவரை குணப் படுத்த முடியல. அப்போ அவரோட கனவுல ராமரே வந்து ‘நீங்க ஸ்ரீஜயந்திபுரம் என்கிற திருச்செந்தூருக்குப் போய், முருகப் பெருமானுடைய விபூதியை வாங்கி இட்டுக்கோங்கோ’ அப்படின்னு சொன்னார். அதே மாதிரி விஷ்வாமித்ர மஹரிஷி வந்து அந்த பன்னீர் இலையில் விபூதியை வாங்கி இட்டுண்ட உடனே அவருக்கு எல்லா வியாதிகளும் போய்டுத்து அப்படின்னு ஒரு புராணக் கதை சொல்லியிருக்கார்.

அருணகிரியாரின் வாக்கு 

திருத்தணி முருகரையும் பவரோக வைத்யநாத பெருமாள் ன்னு சொல்லுவா. (‘நிலையாத சமுத்திரமான’ எனத் தொடங்கும் திருப்புகழ்).
வியாதிகள் போகணும்ன்னு திருத்தணி முருகன் மேல அருணகிரி நாதருடைய ஒரு திருப்புகழ் பாடல் இருக்கு. அதைப் படிச்சா எல்லா வியாதிகளும் நிவர்த்தி ஆகும் அப்படின்னு நம்பிக்கை. 
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி …… விடமே
நீரிழிவு விடாத தலைவலி சோகை யெழுகள மாலை …… யிவையோடே
பெருவயிறீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு …… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனை நலியாத படியுன தாள்கள் …… அருள்வாயே
வருமொரு கோடியசுரர் பதாதி மடிய அநேக …… இசைபாடி
வருமொரு கால வயிரவராட வடிசுடர் வேலை …… விடுவோனே
தருநிழல் மீதிலுறை முகிலூர்தி தருதிரு மாதின் …… மணவாளா
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு …… பெருமாளே.
‘நோய்கள் பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் ருள்வாயே!
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!’ ன்னு பாடல்.
சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   


   கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
      காசங் கயம்குட்ட முதலாய நோயும்
         விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
            வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே.
       ...... 25

செந்திலம்பதியில் அமர்ந்தருளும் தேவ தேவா! உன்னுடைய இலை விபூதியைக் கண்ட மாத்திரத்தில் கை கால் வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலாய நோயும் பூதம், பைசாசம், தீவினைகள் யாவுமே விட்டோடிடும்.


சுப்பிரமணிய புஜங்கம் முழுவதும் இசை வடிவில்  (மும்பை அன்பர்கள் )

https://youtu.be/khP6Kg80LLU

                                          முருகா சரணம் 

No comments:

Post a Comment