Thursday 5 March 2015

                            புய வகுப்பு தொடர்ச்சி -அமீர் கல்யாணி ராகம் 

                                        பாடல் பகுதி 

மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர
சேனை தேடி விததிபெ றச்சில
கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன  ...... 9

வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூதபி
சாசு போத மிகுதொனி பற்றிமு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன  ...... 10

விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும்
லீலை யாக விமலச லத்தினை
விண்டி றந்து மொண்டு வீசிப் பொலிந்தன  ...... 11

விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர்கு லக்குலி
சன்ப யந்த செங்கை யானைக் கிசைந்தன  ...... 12

விகசித தமர பரிபுர முளரி தொழா அபி
ராம வேடர் விமலைதி னைப்புன
மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன  ...... 13

விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ரஅ
லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின  ...... 14

விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்புழு
கோட ளாவி ம்ருகமத கற்புர
குங்கு மங்க லந்து பூசித் துதைந்தன  ...... 15

வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர்
தூது போக விடுமது பக்ஷண
வண்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன  ...... 16


அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின் விளக்கவுரை 


மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர

சேனை தேடி விததிபெ றச்சில கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன  ...... 9.  

மேன்மேலும் சிறந்து அண்ட உச்சி வரை அசுரர் சேனைகளின் இருப்பிடங்களைக் கண்டு பிடித்து அவரகள் பரவி இருந்த இடங்கள் அனைத்தையும் சிதறி அடிக்க தோள் வளை, கை காப்பு முதலியன கண் என ஒலி எழுப்ப மேலே சுழன்றன -

(முருகனின் வாகைப் புயங்களே).

திருமுருகாற்றுபடை: ஒரு கை கீழ் வீழ் தொடியோடு மீ மிசை கொப்ப

உரை - ஒரு கை தொடியோடு மேலே சுழன்று கள வேள்விக்கு முத்திரை கொடுப்ப

வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூதபி
சாசு போத மிகுதொனி பற்றிமு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன  ...... 10


......... ........  

மற்றவர்கள் பயந்து ஒதுங்கும் துஷ்ட மிருகங்களும் பயப்படும்படியும் தீயைக் கக்குகின்ற கண்கள் உள்ள பேய்களும் பிசாசுகளும் ஓடிப் போகும்படி பலத்த சத்தத்துடன் ஒலி மிகுத்துள்ள கண்டா மணியை வாசிக்க முற்பட்டன -

(முருகனின் வாகைப் புயங்களே).

திருமுருகாற்றுபடை: ஒரு கை பாடியின் படு மணி இரட்ட

உரை - மற்றொரு கை ஒசை இனிதாகிய ஒலிக்கின்ற மணியை மாறி ஒலிக்கப்பண்ண

முருகன் கையில் மணி உண்டு என்பதை கந்த புராணமும் -

வீறு கேதனம் வஜ்ரம் அங்குசம் விசிகம்
மறிலாத வேல் அபய மேல் வலம் வரதம்
ஏறு பங்கயம் மணி மழு தண்டு வில் இசைந்த
ஆறிரணதடு கை அது முகம்

- எனக் கூறும்.

புத பிசாசுகள் சேட்டைகள் மிகுந்த இடங்களில் சேவல் விருத்தம் போல இந்த வகுப்பையும் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்

குமார தந்திரத்தில் 6 - வது மூர்த்தியானது சரவணபவ மூர்த்தம். அதன் தியான சுலோகம் பின் வருமாறு -

சக்திம் கண்டாம் துவஜ சாகிஜே
குக்குடம் பாச தண்டவ் டங்கம்
பாணம் வரதம் அபயம் கார் முகம்
ச ஊர்த்தவ கஸ்தம் பீதம் செளமியம்
விதச நயனம் தேவ சங்கை கி உபாசியம்
சத்விகி பூஜ்யம் சரவணபவம்
சண்முகம் பாவயாமி

விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும்
லீலை யாக விமலச லத்தினை
விண்டி றந்து மொண்டு வீசிப் பொலிந்தன  ...... 11


.........அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின்  பதவுரை .........  

பலவகையான பரதக் கலையில் வல்லுரானதேவ ஸ்திரிகள் கூட்டத்தில் ஒவ்வொருவர் மேலும் (அவர் ஆடும் போது) விளையாட்டாக தூய ஆகாச கங்கையின் ஜலத்தை ஆகாயத்திலிருந்து வருவதற்கு வழி திறந்து அந்நீரை அள்ளி அம் மாதர்கள் மேல் தெளித்து விளங்கின -

(முருகனின் வாகைப் புயங்களே).

திருமுருகாற்றுபடை: ஒரு கை நீணிற விசும்பின் மலி துளி பொழிய

உரை - ஒரு கை நீல நிறத்தை உடைய மேகத்திலே மிக்க மழையைப் பொழியா நிற்க

இல் வாழ்வு சிறக்க மழையைப் பொழிவித்தது ஒரு கை.

விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர்கு லக்குலி
சன்ப யந்த செங்கை யானைக் கிசைந்தன  ...... 12


......... பதவுரை .........  

கொடைக்கு பேர் போன கற்பக மரத்தின் மலர்கள் நடு நடுவில் வைத்து கோர்க்கப்பட்ட கூதள கடப்ப மாலைகளை தேவ வம்சத்தினரான வஜ்ரப்படை ஏந்திய இந்திரன் வளர்த்த சிவந்த கையை உடைய தேவயானைக்கு சூட்டுவதற்கு உடன் பட்டன -

(முருகனின் வாகைப் புயங்களே).

திருமுருகாற்றுபடை: ஒரு கை வாரண மகளிர்க்கு வதுவை சூட்ட

உரை - ஒரு கை இல் வாழ்க்கை சிறப்பாக நிகழ்தல் பொருட்டு மண மாலையை சூட்டிற்று

விகசித தமர பரிபுர முளரி தொழா அபி
ராம வேடர் விமலைதி னைப்புன
மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன  ...... 13


......... பதவுரை .........  

மலர்ந்துள்ளதும் ஒலி செய்கின்றதுமாகிய பாதச் சலங்கைகள் அணிந்துள்ள தாமரையன்ன திருவடிகளை வணங்கி அந்த அழகு நிறைந்த வேடப் பெண், பரிசுத்தை, தினைக் கொள்ளையில் வசித்து வந்த வள்ளியின் மார்பைப் பார்ப்பதற்காக (அதாவது அவளின் பக்குவ நிலையை அறிய) தக்க சமயம் பார்த்து அனைந்தன -

(முருகனின் வாகைப் புயங்களே).

மேவிய புனத்து இதணில் ஓவியமென திகழும் மேதகு குறத்தி திரு வேளைக்காரனே. மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் திரு வேளைப் புகுந்த பராக்ரம.

விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ரஅ
லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின  ...... 14


......... பதவுரை .........  

நடுங்கச் செய்யும் போரில் எதிரிகளை அடக்கி அழிக்க வல்ல தனது தாமரையன்ன கையில் கால் நகங்களையே ஆயுதமாக கொண்டு சண்டை போடும் (காலாயுதக் கொடியோன்) சேவல் கொடி மேம்பட்டு விளங்க (சேவலங் கொடியான பைங்கர) கொடையில் சிறந்த அழகிய அலங்காரம் உடையதானதை தரித்துக் கொண்டு கம்பீரமாக நின்றன -

(முருகனின் வாகைப் புயங்களே).

விதரண - வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்ட வேறாது உதவும் பெருமாளே

விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்புழு
கோட ளாவி ம்ருகமத கற்புர
குங்கு மங்க லந்து பூசித் துதைந்தன  ...... 1
5

......... பதவுரை .........  

கபடம் மிக்க எனது மனதை தன் வசமாக்கி அகில் பன்னீர் புனுகுச் சட்டம் இவைகளுடன் என் மனதையும் கலந்து கஸ்தூரி பச்சைக் கற்பூரம் குங்குமப் பூ சேர்ந்த இந்தக் கலவையை பூசிக் கொண்டு பிரகாசித்தன -

(முருகனின் வாகைப் புயங்களே).

அழுக்கும் துர்நாற்றமும் மிக்க என் மனதை பக்தியினால் பண்படையச் செய்து தன்னுடன் சேர்த்துக் கொண்டன.

- எனையும் மனதோடு அடிமை கொளவும் மனதோடு வரவேணும்.

- கடப்பையும் என் நெஞ்சையும் தாழிணைக்கே புகட்டி.

வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர்
தூது போக விடுமது பக்ஷண
வண்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன  ...... 16


......... பதவுரை .........  

தன்னைக் காணும் பெண்களின் உள்ளத்தில் விரக போரை உண்டாக்கும் உலாக் காட்சியைக் கண்டு வணங்கி அழுது மனம் நொந்த மாதர்கள் உன்னிடம் காதல் தூதாக அனுப்பிய தேன் உண்ணும் வண்டுகள் கூட்டமாகச் செர்ந்து மொய்த்திருந்தன -

(முருகனின் வாகைப் புயங்களே).

வண்டரங்க புணர் கமல மது மாந்தி பேடையனோடும்
ஒண்டங்க வினையாடும் அளி அரசே ஒளி மதிய துண்டரங்க
பூண்மார்ப திருத்தோணிப்புரத்துறையும்
பண்டரங்கருக்கு என் நிலையை புரிந்து ஒரு சொல் பகராயே

... தேவாரம்

குருஜியின் குரலில் பாடலை கேட்போம் 





பாடலின் மற்ற பகுதிகள் தொடரும் 

முருகா சரணம் 

No comments:

Post a Comment