Tuesday 11 September 2018

சுப்ரமண்ய புஜங்கம் 23



                                                                            சுப்ரமண்ய புஜங்கம்  23 

                                                                                          

ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா

ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய: |

மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்

ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி ||

அன்பரின் பொருள் விளக்கம் 


இதுல ‘மமாந்தர் ஹ்ருதிஸ்தம்’ : என் ஹ்ருதயத்துக்கு உள்ளே இருக்கும்

 ‘மனக்லேசம்’: மனக்கவலை என்ற அசுரனை

 ‘ந ஹம்ஸி ப்ரபோ’: நீ கொல்ல மாட்டேங்கறியே

 ப்ரபோ ‘கிம் கரோமி’ நான் என்ன பண்ணுவேன்,

 ‘க்வயாமி’ யார் கிட்ட போய் கேட்பேன்-னு சொல்றார்.


ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா

ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய: |

 இந்த உலகத்தை ஆயிரம் அண்டங்களாக செய்து ஏக சக்ராதிபதியா ஆண்டுண்டு இருக்கான் ஸூரபத்மன். அந்த ஸூரபத்மன் என்ற பெயர் கொண்ட அவனையும், தாரகனையும், ஸிம்ஹவக்த்ரனையும் நீ கொன்றாய். அதனால் அவர்கள் தங்களுடைய பாவங்களில் இருந்து விடுபட்டு நற்கதியை அடைந்தனர்.அந்த தைத்யர்களை எல்லாம் நீ வதம் பண்ணே. ஆனா என் மனசுக்குள்ள இருக்கற இந்த கவலைங்கற ஒரு அசுரனை மட்டும் நீ கொல்ல மாட்டேங்கறியேன்னு கேட்கறார்.

சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.).

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   

 அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்
  அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்
  மண்டும் பலஞ்செற்ற வடிவேல அலைவாய்
  மருவும் குகாஎன்றன் மன நோயு மொழியே.       ...... 

ஓராயிரம் அண்டங்களைக் கொண்ட சூரபதுமன், அவன் தம்பிமார்களாகிய சிங்கமுகன், ஆனைமுகன், ஆகியவர்களின் வலிமையை நாசஞ் செய்தழித்த வடிவேலைக் கையில் தாங்கி அலைவாயில் வீற்றிருக்கும் அதிபனே! என் மனநோயை ஒழிப்பாயாக.

ஆதி சங்கரர்  மகானே இப்படி பிரார்த்தனை செய்யும்போது நாம் எம்மாத்திரம்?அவர் நமக்காகவே பிரார்த்திக்கிறார் என்பது தான் சத்யம்.

நாம் நம் மனக்கவலைகளை,கிலேசங்களை,விகாரங்களை ஒழிக்குமாறு நம் பெருமானை வேண்டுவோம் . 

நமது  அருணகிரிநாதர் பாடிய பாடல்களில் தற்போது நினைவில் வருபவை 

1) நாடாப் பிறப்பு முடியாதோ எனத் தொடங்கும் திருப்புகழில் 
வாராய் மனக்கவலை தீராய் நினைத் தொழுது வாராய் எனக்கெதிர் முன் வரவேணும்...
என்கிறார்.

2) மனக்கவலை ஏதுமின்றி உனக்கடிமையே புரிந்து
வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே
......
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் முருகா..

                                     முருகா சரணம் 

No comments:

Post a Comment