Monday 9 October 2017

அபிராமி அந்தாதி - 21


                                             அபிராமி அந்தாதி - 21
மங்கலை செங்கலச முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில்தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே.

அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 
அபிராமியைப் பலவாறாகவும் அனைத்து சக்தி வடிவாகவும் வர்ணிக்கும் பாடல் இது.
மலையரசியும், அலை பாயும் கங்கை நதியை முடிமேல் தாங்கி நிற்கும் சிவபெருமானின் இடப்பாகத்திலிருப்பவளும், செப்பினாற் செய்தாற் போன்ற அளவான மார்பையும் குலுங்கும் பொன்னிற வளையல்கள் அணிந்த சிவந்த கைகளையும் உடையவளும், இளங்கொடி போன்றவளும், அனைத்துக் கலைகளுக்கும் சின்னமான மயில் போன்றவளுமான மங்களகரமான மஞ்சள் நிறத்தவளே காளியாகவும், மகாலட்சுமியாகவும், சரஸ்வதியாகவும் இருக்கிறாள்.
பாடல் அன்னையின் வெவ்வேறு குணங்களையும், நிறங்களையும் போற்றிப் பாடுகிறது... 

மங்கலை
 மங்கலமாக இருப்பவளே.... என்றும் பக்தர்களுக்கு என்றென்றும் மங்கலத்தை வழங்குபவளே...

செங்கலச முலையாள்
 செம்மையான கலசம் போன்ற திருமுலைகளைக் கொண்டவளே... 
இங்கு  அன்னையின் தாய் நிலையைக் குறிப்பிடுகிறார்  பட்டர்...
மலையாள்..
 மலைமகளே... இமவானிடத்துதித்த மலைமகளே... "
மலையாள் என்பதற்கு மலையின் மேல் வாழ்பவள் என்றும் பொருள் கொள்ளலாம். பண்டாசுரனை அம்பிகை அழித்து வெற்றி கொண்ட பிறகு லலிதாம்பிகைக்கும், காமேச்வரனுக்கும் திருக்கோயில் அமைக்க தேவர்கள் விரும்பி, தெய்வத் தச்சனாகிய விசுவகர்மாவையும், அவுணத் தச்சனாகிய மயனையும் அழைத்தனர்.அச்சிற்பியர் பதினாறு ஸ்ரீ நகரங்களை ( ஒன்பது மலை மேலும், ஏழு கடலிலும்) அமைத்தனர். அந்த ஒன்பது மலைகளின் மேல் வாழ்வதனால் மலைமகள் என்றும் பொருள் கொள்ளலாம்.
"வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில்"
கடலில் தோன்றிய வேதங்களை சங்கு போல் வளையல்களாக அணிந்தவளே' என்றும் பொருள்.
சங்கின் பிறப்பிடம் எது? கடல்... கடலின் அதிதேவதை...? வருணபகவான்... அன்னைத் தன் திருக்கையில் சங்காலான வளைகளை அணிந்திருக்கின்றாள்.. அவ்வளைகள் நீ பக்தருக்கு அருளும்போது அங்கும் இங்கும் அலைகின்றன... அப்படிப்பட்ட செம்மையான கரங்களைக் கொண்டவளே... 

அனைத்துக் கலைகளும் அறிந்தவளே...
 மயிலைப் போன்றவளே....
அபிராமியை மயிலென்பானேன்?
மயில் போல் அழகானவளே, கலைகளை அறிந்தவளே என்று பொருள் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் மயிலைப் பற்றி அறிந்து கொண்டால் உவமை எங்கேயோ போவதைப் புரிந்து கொள்ளலாம். ஆதியில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி எனும் மூன்று தேவிகளுக்குத் தான் வாகனமாக இருந்ததாம் மயில்; முருகன் தனக்குத் தனித்தன்மை வாய்ந்த வாகனம் வேண்டும் என்று நினைத்தாராம்; தன்னால் மற்ற தேவர்களுக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்று ஏற்பட்டதும், மயிலை வாகனமாக ஏற்றுக்கொண்ட தந்திரம் போதாதென்று வேறு எந்தக் கடவுளும் இனி மயிலை வாகனமாகக் கொள்ளக்கூடாது என்று நிபந்தனை போட்டு, மயிலைத் தனக்கே தனக்கென, தனிப்பட்ட வாகனமாக எடுத்துக் கொண்டானாம் கந்தவேள்.
புனிதமானதாகவும் கடவுளுக்குச் சொந்தமானதாகவும் நினைத்ததால் பட்டர் அபிராமியை மயில் என்கிறார் பட்டர்.
"தாவு கங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்

.
பாய்கின்ற கங்கையின் பொங்கு அலைகள் தங்கும் நீள்முடிகளைப் பிரித்துக் கட்டக்கூடிய ஈசனைத் தன் துணையாகக் கொண்டவளே... அவ்வீசனைத் தன் உடையவனாக............ கணவனாகக் கொண்டவளே.....
"பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் "
இ ங்கு அன்னையின் ஐந்து நிறங்களைக் கொண்டு காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்...
பிங்கலை என்பதற்கு பொன்போன்று ஒளிர்பவளே... சுவர்ண தேவியே.... என்று
நீல நிறங்கொண்ட நீலியே.. துர்க்கையே...
செய்யாள் - செம்மை நிறமானவளே... அருணாதேவியே...
வெளியாள்... வெண்மையானவளே.... ஸ்வேதா தேவியே....
பசும் பெண்கொடியே -

பச்சை நிறங்கொண்ட பெண்கொடியே... அன்னை மீனாட்சியே... அன்னையின் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு பெயர் உண்டு...
அன்னையைப் போற்றும் லலிதா சகஸ்ரநாமம் அவளுக்கு பல வண்ணங்கள் இருப்பதாகவே கூறுகிறது. மூலாதார சக்கரத்தில் சிவப்பு, சுவாதிஷ்டானத்தில் ஆரஞ்சு, மணிபூரகத்தில் மஞ்சள், அநாகதத்தில் பச்சை, விசுத்தியில் நீலம், ஆக்ஞையில் சர்வ வர்ணங்கள் ஒளிர்கின்ற சோபிதையாக அம்பிகை அருளாட்சி செய்கிறாள்.
இதனை முறையே ரக்தவர்ணா, ஆரக்தவர்ணா, பீதவர்ணா, சயாமாபா, ஸ்ரீகண்டார்த்த சரீரிணி என்றும், சர்வ வர்ணோப சோபிதா என்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தெளிவுபட விளக்குகின்றது. அதேபோல அம்பிகையை பஞ்சவத்ரா, அதாவது ஐந்து முகங்கள் கொண்டவள் எனவும், அவளே காயத்ரி வடிவானவள் என்றும் சகஸ்ரநாமம் கூறும்.
இதனை உணர்த்தவே செங்கலசம், செய்யாள் எனும் சொற்களால் சிவப்பு நிறத்தையும், பிங்கலை எனும் சொல்லால் மஞ்சள் நிறத்தாள் என்பதையும், நீலி எனும் குறிப்பால் நீலநிறம் உடையவள் என்பதையும், வெளியாள் என்று வெள்ளை நிறத்தையும், பசும்பெண் கொடியே என்று விளித்து பச்சை நிறமுடையவள் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார் பட்டர்.
யவனாக............ கணவனாகக் கொண்டவளே.....
"
                                                                    பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 

       

                                                             Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                  https://youtu.be/Zki0dKMMcD0

                                                                       அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                                                                   


                                                                Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                          https://youtu.be/f6IXGupGYKE
                                                                        அபிராமி அன்னையே சரணம்                                                                             
                                                                                           முருகா சரணம் 

No comments:

Post a Comment