Tuesday 7 August 2012

வீரபண்டிதா ! வீரஆசாரியா ! வினை தீராய் !


திருப்புகழ் பாடல் 385 )

" அன்பர்களே ! நாம் பிறக்கும்போது இரண்டு மூட்டைகளை சுமந்து வருகிறோம். ஒன்று பாவ மூட்டை. இன்னொன்று புண்ணிய மூட்டை. துன்பம் அனுபவிக்கும்போது பாவமூட்டை குறைகிறது. எனவே முருகனுக்கு நன்றி கூறவேண்டும் !  இனி பாவம் செய்யாவிடில் பாவமூட்டை அழிந்து விடும். அதைப் போலவே இன்பம் அனுபவிக்கும்போதும் புண்ணிய மூட்டை குறையும். இனி புண்ணியம்  செய்யும்போது " நான் செய்கிறேன் என்ற " தற்போதம் இல்லாமல் நிஷ்காம்யகமாக) ,  " கரவாது, வடிவேல் இறைதாள் நினைத்து " செய்தால் புண்ணிய மூட்டையும் சேராது!  இப்படி இரு வினைகளும் இல்லாது போனால் பிறவி இல்லாது போகும்."  இது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கூறும் வழி. 

வாரியார் சுவாமிகள் காட்டும் வழி அவ்வளவு சுலபமில்லை என்று நாம் அறிவோம். நம்மால் பாவம் செய்யாமல் இருக்கமுடியாது ! மேலும், ஒரு சிறிய அல்பத்தனமான தானம் செயதாலும் உடனேயே "நான் செய்தேன்,
நான் செய்தேன்" என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது நமது பழக்கம். 

பிறவிகளோ "எழுகடல் மணலின் அளவிடின் அதிகம்". மேலும்

" எருவாய் கருவாய்தனிலே உருவாய்......
   இவர் போய் அவராய், அவர் போய் இவராய்
 இதுவே தொடர்பாய் வெறிபோலே...
 பலகோடி தாயுடனே அவமாய்" அழிகிறோம்.
  (திருப்புகழ் --- 274 )

இந்த பிறவித் துன்பத்திற்கு காரணமான வினைகள் தீர வழி என்ன  ?
அருணகிரியார் வழி காட்டுகிறார்.  முருகனைச் சரணடைந்து துதிக்கச்
சொல்லுகிறார்.ஏனென்றால் மற்ற தெய்வங்களிடம் சென்றால் 
என்னால் முடியாது...அவரிடம் செல்...இவரிடம் செல்என்று 
சொல்லக்கூடும் !  ஆனால் "நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே
 வரும்,  நாலந்த வேதத்தின்  பொருளாய் விளங்கும்  முருகனோ"
சகல கலா வல்லவன்.  " நான்"  என்று மார் தட்டும் பெருமாள் ! ". 
 ( THE BUCK STOPS HERE ! )   ( திருப்புகழ் --- 391  ).

மேலும் வினைப் பயனை நம் சிரசில் எழுதுவது பிரமன் அல்லவா ? அந்தப் 
பிரமனது அழகிய குடுமியைப் பிடித்து, தனது மலர் போன்ற அழகிய திருக்கரம் வருந்த பலமுறை குட்டி திருவிளையாடல் செய்பவன் நம் முருகப் பெருமான்.  
( "கமலத்தனை மணிக்குடுமிப் பற்றி மலர்
சித்திர கரத்தலம் வலிப்ப பல குட்டி நடனங்கொள்வேளே" )
(.திருப்புகழ்....105  ) 

முருகனை திருப்தி செய்வதும்  மிகச் சுலபம் ! " முருகா ! பரமா !, குமரா! உயிர் கா "  என ஓதினால் போதுமாம். அதுவும் ஒரு கால் ஓதினால் போதுமாம் ! ஏனென்றால் " முருகா " என ஓர் தரம் ஓத, அடியார் முடிமேல் இணை தாள் அருள்பவன் முருகன்.

இதே கருத்தை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில்,  
" அஞ்சு முகம்தோன்றின் ஆறு முகம்தோன்றும்;
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்; - நெஞ்சில் 
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் ;
முருகா என்று ஓதுவார் முன் "
என்று உறுதி செய்துள்ளார்.

ஆறு குழந்தைகளாக திருவிளையாடல் செய்த முருகனை, உமை அம்பிகை 
ஆர்வத்துடன்  அணைத்து இந்த உலகம் உய்ய  " கந்தனாக" அருளினாள். அவனுக்கு ஞானப்  பால் ஊட்ட, ஞானப்  பண்டிதன் ஆனான். மேலும், ஆணவம்சூரபத்மன்) , கன்மம்சிங்கமுகாசுரன்), மாயையை ( தாரகாசுரன்) அழிக்க ஞானவேல் அருளினாள்.

எனவே ஞான பண்டிதன் என்றாலே முருகனைத்தான் குறிக்கும்.

பண்டிதன் இலக்கணம்  என்ன ?
கற்ற கல்விகளில், கலைகளில் சிறந்து விளங்குபவன் என்று பொருள்.
முருகனோ
" அகலிய புராணமும், பிரபஞ்ச
சகல கலை நூல்களும், பரந்த
அருமறையநேகமும், குவிந்தும் அறியாத,
அறியும் அறியாமையும் கடந்த அறிவு " (திருப்புகழ் - 358)


[ பொருள் -- விரிவான புராணங்களும், உலகிலுள்ள சகல கலை நூல்களும், விரிந்துள்ள அறிய மறை நூல்கள் ( வேதம் முதலிய மறை நூல்கள் ) பலவும் ஆக இவையெல்லாம் ஒன்று கூடிசசேர்ர்ந்து முயன்றும் அறியமுடியாத அறிவு, அறியாமையை ஆகிய இரண்டையும் கடந்த அறிவானவன்.]..

எனவே முருகன் ஞானபண்டிதன் ! வீரபண்டிதன் !

ஆசாரியானின் இலக்கணம் என்ன ?  

மகாபெரியவாள் சொல்லுகிறார். "ஆசாரியர் வெளி நடத்தை, படிப்பு இவற்றில் சிறந்தவராக இருப்பார்.  ஒரு சிஸ்டத்துக்கு கட்டுப் ப்ட்டவர்போல்  வாழ்ந்து காட்டுவார்.  மற்றவர்களுக்கு அவற்றைப் பின்பற்றுமாறு செய்வார். குருவின் குணங்களான உள்ளுக்குள்ளே சிஸ்டம்கள் கடந்தவராக, பிர்த்யஷமாக ஈஸ்வர அனுபவமும், ஆத்மா அனுபவமும், பெற்ற பெருமை வாய்ந்தவராக, அநுக்ரஹ சக்தி கூடியவராகமும் இருப்பார். " ( தெய்வத்தின் குரல் .. பாகம் 3 , பக்கம் 46 ).

அருணகிரியார் முருகனை வெறும் ஆசாரியானக் அழைக்கவில்லை.....வீர ஆசாரியானாக தொழுகிறார் ! ( திருப்புகழ் 385  ).

 எனவே இந்த  வீரபண்டிதனை , வீராசார்யனை வேண்டிக்கொண்டால் நம் வினைகள் தீர்ந்து விடும் என்பதில் ஒரு சந்தேஹமும் இல்லை.நம்மால் அவனை அணுக முடியுமாஇவனை யார் யார் காண வருகிறார்கள்  இவனை எங்கு காண்பது ?  இவன் இருக்கும் இடம் எது ?  அந்த  இடம் எப்படி இருக்கும் இந்த கேள்விகள் நமது மனத்தில்  எழுகின்றதல்லவா ? 
 இந்த முருகனைக் காண யார் யார் கூடி இருக்கிறார்கள் ?
  • முதலில் பிரமன். இவர்  ஆறு இதழ் தாமரை ஆகிய சுவாதிஷ்டானம் ஆதாரத்திலே இருப்பவர் உதிக்கும் இளஞ்சூரியன் போல் செம்பொன் நிறமுள்ள ஆடம்பரமுள்ளவர். ( நாலிரண்டு இதழாலே கோலிய ஞாலமுண்டக மேலே தானிள ஞாயிறு என்று உரு கோலாகாலன்.). 
  • பிறகு திருமால். இவர் அதன் மேல் நிலையிலே உள்ள பத்து இதழ் தாமரை ஆகிய மணிபூரகம் ஆதாரத்திலே இருப்பவர்.  இவர் பூமியை ண்டவர்உயிர்களைக்கக்கும் தொழிலைக் கொண்டவர். ( ஞாலம் உண்ட பிரான் ஆதாரனும்)
  • பிறகு ருத்ர மூர்த்தி. இவர் அதன் மேல் நிலையிலே உள்ள பன்னிரண்டு இதழ் தாமரை ஆகிய அனாகதம்  ஆதாரத்திலே இருப்பவர் . இவர் யோகத்துக்கும், மந்திரங்களுக்கும் மூலதாரன். ( யோகா மந்திர மூலாதாரனும்)
  • பிறகு சதாசிவ மூர்த்தி . இவர் மேலே சொல்லப்பட்ட மூவரும் விரும்பித் தேடி நிற்கும் பெருமை உடையவர்அதன் மேன்மேல் நிலையிலே உள்ள   மூன்று இதழ் தாமரை ஆகிய புருவ மத்தியிலே உள்ள ஆஞ்சை   ஆதாரத்திலே இருப்பவர்.. இவர்  ஒளியும், மென்மையும் கொண்ட உருவத்தர். ( நாடி நின்ற ப்ரபாவாகாரனும் நடுவாக) .
 முருகன் எழுந்தருளி இருக்கும் இடம் எப்படி இருக்கும் ?
  • மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கு மேல் நிலையிலுள்ள ஆயிரத்தெட்டு இதழ் தாமரை ஆகிய சஹஸ்ராரம் 
எனப்படும் கபாலம் மேல் உள்ள இடம்.
  • விசாலமான மண்டபம்.
  • முருகன் லீலைகளுக்கு வேண்டிய இருப்பிடமாக உள்ள இடம், 
  • முருகன் வீற்றிருக்கும் ஸ்தானம்  இது என்று சாத்திர நூல்கள் அறிந்து கூறுவதுமான இடம்.ரத்னமயமான அழகிய மண்டபமும் ஆன இடம். 
  • மேன்மை வாய்ந்த இடம்
  •  கோடா கோடிக்கணக்காய் ஓளி விளங்கும் இடம்.
  • விளங்குகின்றன தூபம் வீசி நின்று காட்டப்படும் இடம். 
  • விளங்குகின்றனதீபங்கள் வீசி நின்று காட்டப்படும் இடம்
இதில் ஏறி அமர்ந்துள்ளான் நமது வீர பண்டிதன், வீர ஆசாரியன்.

·         இவன்  பெருமை இதுமட்டுமல்ல. இவன் அன்னை எப்படிப்பட்டவள் என்று அறிந்தால், நமது பிரமிப்பு மேலும் அதிகரிக்கும்.
·         அவள் ஆலகந்தரி, மோடாமோடி( ஆடம்பரமுள்ள துர்கை ), குமாரி, பிங்கலை, நானாதேசி, அமோகி, மங்கலை, லோகாலோகி, எல்லா உயர்பாலும் ஆன சம்ப்ரமி, மாதா, மாதவி, ஆதி, அம்பிகை,    எல்லாம் 
     அறிந்த இறைவன் நடிக்க, அவருடன் ஆட விரும்பின அபிராமி,  கால சங்கரி, சீலா சீலி, திரிசூலி, மந்திர சபாஷ பாஷனி, காலகண்டி, கபாலி, மாலினி, கலியாணி, காம தந்திர லீலா லோகினி,   சத்தி    உபாசனை முறையைக் கூறும் ஆகமநூல்களால் ஆராயப்பட்டவள், சிவகாம சுந்தரியாம் பார்வதி.

அப்பப்பா ! இப்படிப்பட்ட  பெருமைகளை உடைய  முருகன் நம் வினைகளை தீர்ப்பான் என்பதில் ஒரு சந்தேகமும் வர முடியாது. ஆனால்  இந்த வீர பண்டித ஆசாரியனை, கம்பீரமாக விசால மண்டபத்தில் வீற்றிருப்பவனை, மூவரும், தேவரும், வணங்க  அமர்ந்திருப்பவனை  நாம்  எப்படி அணுகமுடியும் ? 

இங்கு நக்கீரர் வழி கட்டுகிறார் ! 

கற்கிமுகி என்னும் பூதத்தால் குகையில் அடைக்கப்பட்ட  நக்கீரர்,  தன்  
இருதய குகையில், குகனை வணங்கிப் பாடிய  திருமுருகாற்றுப்படையில் 
திருமுருகனை எப்படி அணுகமுடியும் என்று காட்டுகிறார்.

 திருமுருகனின் அருளைப்பெற்ற ஒரு புலவன் மற்றொரு புலவருக்கு  இன்ன வழியில் சென்று, இன்ன இடத்தில் கண்டால் முருகனின் தரிசனம்  
கிட்டும், அவன் திருவருளையும் பெறலாம் என்று சொல்லும் வகையில்
அமைந்தது திருமுருகாற்றுப்படை. ஆறு படை வீடுகளில் முருகன் எழுந்தருளியுள்ள திருக்கோலங்களை விவரிக்கிறார். பிறகு அவரை தரிசிக்க யார் யார் வருகின்றார்கள் ? அவர்களின் வேண்டுகோள் என்ன ? என்று தெரிவிக்கிறார்.

முருகனை காணத் தேவலோகத்திலிருந்து ஒரு பெரிய கூட்டமே வந்துக் கொண்டிருக்கிறது. முன்னாலே முனிவர்களையும், கந்தர்வர்களையும் பிறரையும் விட்டுப் பின்னே திருமாலும், சிவபிரானும், இந்திரனும் 
வருகிறார்கள்அவர்களுக்குப் பின்னால் முப்பத்து முக்கோடித் தேவர்கள் 
வருகிறார்கள்

அவனை வழிபடுவோர்களில் தான் எத்தனை வேறுபாடுகள்.  அழகிய 
தேவமகளிர், போர்களத்தில் உணவு  பெற்ற பேய்க் கூட்டம்,  இந்திராதி தேவர்கள், கொலையே புரிகின்ற வேடர்கள், ஞானியர்கள்  , முனிவர்கள், அந்தணர்கள் என்று முருகனைக்காண ஆர்வத்துடன் வந்த பக்தன் காணுகின்ற கூட்டம்  இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் பிரமனை மட்டும்  காணவில்லை ! ஏன் ?

ஓங்கார மந்திரத்திற்குப்  பொருள் தெரியாததால் முருகன், பிரமனை தலையில் குட்டி சிறையில் அடைத்து விட்டான்.

இன்னொரு வகையிலும் இந்த வரலாறு வழங்கி வருகிறதுசூரசங்காரம் நடந்த பிறகுஇந்திரன் தன மகளாகிய தேவயானையை முருகனுக்குத் திருமணம் செய்வித்தான்அப்போது மனம் மகிழ்ந்த முருகன் தன கையிலுள்ள வேலைப் பார்த்து, " நமக்கு எல்லாம் தந்தது இவ்வேல் " என்றான். அப்போது அருகில் நின்றிருந்த பிரமன், " இவ்வேலுக்கு நான்தானே சக்தி தந்தேன்என் படைப்புக்கு அகப்பட்டது தானே இது ? " என்று சொன்னான். அது கேட்ட முருகன், " நம் கையில் இருக்கும் வேலுக்கு நீ கொடுக்கும் சக்தியும் உண்டோஏன் வீணே அகங்கரிக்கிராய்  ? இவ்வாறு கூறிய நீ பூமியிலே போய் கிடப்பாயாக ! " என்று சாபமிட்டானாம்.

(இதை அருணகிரிநாதர் " எட்டவொணா வேதனத்தொடு கோ கோ வெனப்  பிரமா ஓடவிக்கிரம வேலேவு பத்திரு தோள் வீர  "  என்று "சுட்டது"  என்று துவங்கும்   திருப்புகழ் – 368 pa பாடலில்anubavikkiraar அனுபவிகிறார்).  

இவ்வளவு பெரியக் கூட்டத்தில் நமக்கு   எப்படி  முருகன்  தரிசனம் கிடைக்கும்  என்ற ஏக்கம் பக்தனுக்கு உண்டாகிறதல்லவா ?   ஆனால்முருகனுக்கு  அருகில் எப்போதும் இருந்துகொண்டு தொண்டு செயபவர்கள், இந்த பக்தன்  வருவதைக்கண்டு  முருகனிடம் சிபாரிசு செய்வார்களாம்  ! "  எப்படி ?

" இந்த பக்த்ன் இரங்கத் தக்கவன்.  அதில் சிறிதும் ஐயமில்லை அறிவு வாய்ந்த இரவலன்ஈகையால் வந்த நின் புகழைக் கேட்டு விரும்பி. உன்னிடம் ஒன்றைப் பெரும் பொருட்டு வந்திருக்கிறான்இனியவையும் நல்லவையுமாகிய சொற்களையும் திருநாமங்களையும்  நன்றாகப்  பலவாகக்  கூறித் துதித்து வந்தான்.. பெருமாளே. இவனுக்கு அருள் புரியவேண்டும் " என்று விண்ணப்பித்துக் கொள்வார்கள் .

(அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண்புகழ் நயநதென 
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி ---
------------------திருமுருகாற்றுப்படை)

முருகன் செய்வது என்னஉடனே பக்தன் உள்ள இடத்திற்கு வருவான். முருகனுடைய உருவமோ தெய்வத் தன்மை வாய்ந்தது; பராக்கிரமம் விளங்குவது;  ஆகாயத்தை அளாவிய உயரத்தை உடையது; மேலும் அது   காண்பவருக்கு  அச்சத்தைத் தரும் நெடிய கோலம். 

எனவே பகதன் அஞ்சிவிடப் போகிறானே என்று பரம கருனையுடன்   அடக்கிக் கொள்ளுகிறான். பிறகு தனது மிக தொன்மையாகிய அழகுத் திருஉருவத்தைக் 
காட்டுகிறான்

(தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி
அணங்குசால்உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
  மணங்கமழ தேய்வத்து இளநலம் காட்டி ---
------------------திருமுருகாற்றுப்படை)

இது மட்டுமா ? நமக்கு இறைவன் அருள் செய்வானா ? அதற்குறியத்  தகுதி நமக்கு இல்லையே ? என்று கலங்கும்போது, கருணாநிதியாகிய முருகன்பயப்படாதே  அப்பா !  ",  என்று அபயம் அளித்து, " நீ வருவது எனக்கு முன்பே தெரியும் ! நீ சொல்ல வேண்டாம். உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். நீ அஞ்சாமல் இரு. உனக்கு வேண்டியவன எல்லாம் கிடைக்கும். " என்று சொல்லாமல் சொல்வான். 

 (அஞ்சல் ஓம்புமதி ; அறிவல்நின் வரவுஎன
  அன்புடை நன்மொழி அளைஇ ---
   ------------------திருமுருகாற்றுப்படை)

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் காட்டுவது 

·         நக்கீரர் கற்குகையில் கற்கிமுகி என்னும் பூத்தால்  சிறை வைக்கப்பட்டார்.
·         குகனை மனக்குகையில் தியானித்து சரணடைந்தார்.
·         ஆறு ஆதாரங்களால் ஆகிய ஆறுபடை  வீடுகளில்  எழுந்தருளியுள்ள 
முருகனை வருணிக்கிறார்
·         முருகனைக் காணச் செல்லும் முத்தேவர், அடியார், முனிவர், பக்தர் கூட்டத்தைக் காட்டுகிறார்.
·         பக்தன் எப்படி முருகனை துதிக்கிறான் என்று விவரிக்கிறார்.
·         முருகனைக்கான தகுதி உண்டா ? முருகன் அருள் கிடைக்குமா ? என்று அச்சப்படும் பக்த்தனை எப்படி முருகன் அடியார்கள் அவனுடைய அருளுக்கு பாத்திரமகுகிரர்கள் என்று காட்டுகிறார்.

திருப்புகழில் அருணகியார் காட்டுவது

·         ஜீவாத்மா வினைப் பயனாக பிறவிப் பிணி  என்னும் துன்பக் குகையில் சிறைப் பட்டுளள்ளது.
·         முருகனை மனக்குகையில் தியானித்து சரண்அடைய அறிவுருத்துகிறார்.
·         நமது உடலிலேயே உள்ள ஆதாரங்களுக்கு  மேலே உள்ள விசால மண்டபத்தில் (சஹாஸ்ராரம்) எழுந்தருளியுள்ள முருகனை 
வருணிக்கிறார்.
·         முருகனின் தரிசனத்திர்காக்  காத்திருக்கும்  பிரமன், திருமால், ருத்ரன், சதாசிவன் இவர்களைக் காட்டுகிறார்.
·         எப்படித் துதிக்க வேண்டும் என்று வழி காட்டுகிறார்.  
(சிவகாம சுந்தரி வாழ்வே !, தேவர்கள் பெருமாளே ! வீர  பண்டிதா ! வீர ஆசாரியா ! வினை தீராய் ! )
·         நம் வினைகளை முருகன் தீர்ப்பானா ? அதற்கு தகுதி நமக்கு இல்லையே என்று அச்சப்படும்போது  " கவலைப்படாதே .... அவன் யார் செல்வன் ? சிவகாம சுந்தரி  செல்வன் அல்லவா ? அசுரர்களிடம் 
சிறைப்பட்டு  உழன்ற தேவர்களை காத்த பெருமாள் ஆயிற்றே ? 
( மாயையில் துன்புற்று உழலும்  ஜிவாத்மாவை காக்கும் 
பெரிய கருணைக்கடல் )  என்று உறுதி அளிக்கிறார்

அப்போது முருகன் விசால மண்டபத்திலிருந்து உடனே வந்து நமக்கு 
அருளுவான் என்பது சாத்தியம் மட்டுமில்லை சத்தியமும் கூட !

அம்பிகையின் துதி மிகத் துல்யமாகத் தெரிவதாலோ என்னவோ இந்தப் பாட்டுக்கு " துர்கா " ராகம் அமைத்து தந்துள்ளார் நமது குருஜி !

இந்த 385  வது திருப்புகழ் பாடலை ஆறு ஆதாரச் சக்ரங்களுடன் எனக்குப் புரிந்த வரையில் படமாகக் கொடுத்திருக்கிறேன். பிழைகளை நக்கீரர்போல சுட்டிக் காட்டும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். எனக்கு சுட்டெரிக்க மூன்றாவது கண் கிடையாது ! உங்கள் மேலான விமரிசனங்கள் என்னை திருத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
(kindly click & see the image)
---- ஹரிஹரன்முலுண்டு)

2 comments:

  1. Mulund Sri Hariharan has made an excellent commentary about the power of Muruga. A devotee who has surrendered before Muruga has no fear of death or birth. He is free from all Karmas. In Kandhar Alamkaram, Arunagirinathar says: "Brahma who rests on the lotus flower, has ordered me to take another birth in this world. Perhaps, the Lord of Creation is unaware of the fact that the same Lord I worship had imprisoned him earlier. It would be better if the Lord of Creation ponders over before bringing a Muruga devotee like me into this world again. If my Lord Muruga, whose lance has shattered the mighty ocean and the Krownji Hill, comes to know this, he would put another handcuff on Brahma" (Pankerukanenai....Alamkaram 89)

    ReplyDelete
  2. Dr.Hariharan is highly educated but very simple and modest. Storong devotee of Lord Muruga he has written "Patha urai" for Kandar Anu bhuthi with simple meaning. he has also contributed some good articles in various magazines. He requires encouragemnt from the top organizers of Tirpugazh Anbargal so that all anbargals can read those and benefit. S.Krishnamoorthy Thane

    ReplyDelete