Friday 27 July 2018

அபிராமி அந்தாதி - 35

                                           அபிராமி அந்தாதி - 35
                                                                                                                                                                                                                                        
                                                                                                                                                                                                               
திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெண்கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே!

இங்கே பட்டர், அன்னையே விஷ்ணு என்று பாடுகிறார்.


விஷ்ணுவானவள், விஷ்ணுவின் சக்தியானவள் என்று லலிதாசஹஸ்ரநாமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
892. வைஷ்ணவி - விஷ்ணுவின் சக்தியாக இருப்பவள்.
893. விஷ்ணுரூபிணி - விஷ்ணு ரூபமாக இருப்பவள். ( அதாவது லஷ்மீ ரூபமானவள்)
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி 
சந்திரன், யார் தலை மேல் இருக்கிறான்? சிவ பெருமான் தலை மேலே. அப்படி இருக்கும் சந்திரனின் மேலே அம்பாளின் கால் பட வேண்டுமானால், என்ன நடந்திருக்க வேண்டும்?

ஊகிப்பது சுலபம் இல்லையா! அம்மையின் காலடியிலே, சிவ பெருமான், விழுந்திருக்க வேண்டும். ஊடல் காலத்தில், அம்மையின் ஊடல் தீர்க்க, சிவ பெருமான் விழுந்த்தனால்தான், சந்திரனின் மேல் அம்மையின் காலடி பட்டு, அந்தச் சந்திரன் முழுக்கவே, மணம் வீச ஆரம்பித்து விட்டது.

சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா? 

அப்படிப்பட்ட திருவடி தமது தலை மேலே பட, நான் என்ன தவம் செய்தேனோ என்று வியக்கிறார் பட்டர். இந்தத் தவம் விண்ணவரும் கூட செய்த்தில்லை. அவர்களுக்கும் கூட, இந்தத் திருவடித் தாமரையானது சென்னியிலே விழவில்லை. அப்படி இருக்க, தான் செய்த தவம் என்ன என்று வியந்து போற்றுகிறார் பட்டர்.
இங்கே ஓர் வியப்பு என்ன தெரியுமா? சிவபெருமான் விரும்பி வேண்டி, அன்னையின் திருவடிகளை எடுத்துச் சூடிக்கொள்கிறார். அன்னையோ, அடியவர்கள் தவம் இருக்கும்போது, அவளாக வலிய வந்து அத் திருவடிகளைச் சூட்டுகிறாள்.
பெருந்தவத்தின் பயன் - அன்னை அபிராமி அகமகிழ்ந்து தன் திருவடிகளை தலையில் வைத்தாளாம். ' சென்னியது உன் பொற் திருவடித்தாமரை' ( 6 ) என்றும் முன்னும் சொன்னார் அல்லவா! ' எங்கட்கு  என்று பன்மையில் கூறியது அவர் ஒரு சிறந்த தேவி உபாசகர் என்று காட்டுகிறது. தேவி உபாஸகர்களுக்கு ஏழு தலைமுறை குருமார்களை வணங்கிவிட்டு பின்னே தான் பூஜையை ஆரம்பிப்பர், அதனால் பன்மையில் குறிப்பிட்டுள்ளார்.
அபிராமிபட்டர் இதே செய்தியைப் பல இடங்களில் சொல்லப் போகிறார்; அவருக்கு சொல்லச் சொல்லச் சுவைகூட்டும் செய்தி இது. அம்பிகையின் திருவடிகள் அத்தனின் திருமுடியில் இலங்குவதை எண்ணி வியந்தவர், பின்னர்" பனிமாமலர் பாதம் வைக்க மாலினும் தேவரும் வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின் மேலினும் " ( 60) என்பார். சங்கரனார் தமது திருக்கைகளினால் அபிராமியின் தாமரை புரையும் திருவடிகளைத் தடவித் தம் முடியில் சூடியதனைத் " தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு " என்று சொல்வார் ( 98 - ஆம் பாடல்)


எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? 
எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள் தங்களுக்கும் இந்த தவம் கிடைக்குமா?
தரங்கக் கடலுள் - அலைவீசும் பாற்கடலில் 

வெங்கண் ...............- வெப்பம் ததும்பும் கண். வெப்பத்தால் சிவந்த கண்களையுடைய 

பணி .............-         பாம்பு, 
அனை .................- தலை அனை போல. அதாவது பாம்பு படுக்கை.
துயில் கூரும் விழுப்பொருளே 

துயில் கொள்ளும் பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) !


                                                         பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்
                                                                              அன்பர்கள்                                                                                  
                                                                                      

                                                                                அபிராமி சரணம் சரணம்!!
                                                                                             முருகா சரணம் 

No comments:

Post a Comment