Sunday 8 April 2012

விநாயகர் சரணம்


திருப்புகழ் அன்பர் திரு ஹரிஹரன், முலுண்ட், மும்பை அவர்களின் படைப்பு,


"அன்பர்களின் சிந்தனைக்கு..."


 
விநாயகர் சரணம்


பூர்வ ஜன்மத்தில் பண்ணியுள்ள புண்ணியத்தால் நமக்கெல்லாம் குருஜி அருள் கிடைத்திருக்கிறது. குருஜியை திருமுருகனின் அவதாரமாகவே துதிக்கிறோம் என்றால் அது மிகையாகாது. முருகனின் அருளுடன், அவர் அமைத்துள்ள இசை வழிபாட்டு முறையில், திருப்புகழை நாம் கற்று வருகின்றோம்.

எந்த செயலை எடுத்துகொண்டாலும் ஓங்கார வடிவமாக இருக்கும் விநாயகரை முதலில் வணங்கி ஆரம்பிக்கவேண்டும், இது நமக்கு தெரிந்த ஒரு விஷயம். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். விநாயகன் என்றால் அவருக்குமேல் தலைவன் இல்லை. ( Important Person IP; Very Impotant Person VIP !)

இதன்படியேதான் நமது திருப்புகழ் இசை வழிபாட்டு முறையும் பிள்ளையார் சுழியுடன் துவங்குகின்றது. எனவேதான் ஒருவித விளம்பரங்களும் இல்லாமலேயே, நமது "திருப்புகழ் அன்பர்கள்" அமைப்பு யாதொரு விக்னங்களும் இல்லாமல் கம்பீர நடைபோட்டு வளர்ந்து வருகின்றது.

பிள்ளையார் சுழிக்கு பிறகு ஓங்காரம்! துதிக்கையோடு இருகின்ற விநாயகரின் சிரசு, வளைந்து இருக்கும் துதிக்கை, கைத்தலத்து நிறைந்து இருக்கும் கனி இவைகளை சேர்த்துப் பார்த்தல் ஓங்கார வடிவம் தோன்றும், ஓங்காரதிற்குள் அதன் பொருளை முற்றும் உபதேசித்த திருமுருகன், பaம்பை (குண்டலினி சக்தியை)பிடித்துகொண்டுயிருக்கும் மயில் மீது ஆரோகணித்து வருகின்றார்.

திருப்புகழ் வகுப்பும், பஜனையும் துவங்கும்போது முதலில் விநாயகரை துதிசெய்து "ஓம்" மந்திரத்தை உச்சரிக்கின்றோம். பிறகு "முருகா" எனும் நாமத்தை 33 முறை ஜபித்து, திருமுருகனை மனதில் ஆவாஹனம் செய்து கொள்கிறோம். சூரபதுமனை வென்று முப்பது முக்கோடி தேவர்களையும் சிறையிலிருந்து விடுவித்த திருவிளையாடல் நினைவுக்கு வருகின்றது.

பிறகு விநாயகரை பின்வருமாறு துதிசெய்து வழிபாட்டை துவங்குகிறோம்...

யானை முகத்தோன்; பூதகணங்களால் வணங்கபடுகின்றவன்; சத்வ ஆகாரங்களை உண்பவன்; உமை அன்னைக்கு சுதன்; அடியவர்களின் சோகங்களை களைபவன்; அந்த விக்னேஸ்வரனின் தாமரை பாதங்களை பணிகின்றோம்..."சதாபலா.......பாத பங்கஜம்".

விநாயகரை வணங்கியபிறகு துவங்கும் காரியங்கள் எவ்வித இடையூறும் இன்றி பூர்த்தியாகின்றது. ஆதி சங்கரரும் திருசெந்திலாண்டவனை துதிக்க சுப்ரமண்ய புஜங்கம் இடையூறின்றி இனிது முடியும் பொருட்டு விநாயகரை முதலில் ஸ்துதி செய்கிறார் (ஸதா பாலருபாபி விக்னாத்ரி ஹந்த்ரி).

நமது அருணகிரிநாதரும், அவர் அருளியவற்றுள் சிகரமாக விளங்குவதும், கந்தன் எனும் பற்றுகோட்டுடன் தொடர்ந்து ஒன்றுபட வழிகாட்டுவதும் ஆகிய கந்தரநுபூதி (செஞ்சொல் புனைமாலை) சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிகிறார்.

சோக வினாச காரணனான விநாயகர், தன்னை துதிக்காமல் யாராவது காரியங்களை ஆரம்பித்தால் அந்த காரியம் சரியாக முற்றுபெறாதே என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுவார். அவர்களுக்கு சிறிய தடை ஒன்றை உண்டாக்கி, தன்னை நினைக்கும் படி செய்து அந்த காரியம் நல்லபடி பூர்த்தி பெற அருளுவர். இந்த விxயத்தில் அவர் நல்லவர், கெட்டவர், கிழோர், மேலோர், மனிதர், தேவர் என்று வித்தியாசம் பார்பதில்லை.

ஆதியும் அந்தமில்லாத சிவபெருமான் தன் தந்தையாக இருந்தும் இந்த நியதியை அவருக்கு உணர்த்தினaர். திரிபுரங்களை தகனம் செய்ய புறப்பட்ட அவருடைய தேரின் அச்சை பொடிசெய்து பிறகு சரிசெய்து திருவிளையாடல் செய்து காட்டினார்.

அருமை தம்பி முருகனோ தன் காதலி வள்ளி அம்மைக்காக காடு, மலை, தினைபுனம், எல்லாம் அலையோ அலையோ என்று அலைந்தார், வேடனாக நின்றார், மரமாக காட்சியளித்தார், வளைவிbfக்கும் செட்டியாக சென்றார், கிழவனாக நடித்தார். ஆனால் வள்ளியோ அவரை அறிந்துகொள்ளவில்லை. கடைசியில் முருகனுக்கு அண்ணா waபகம் வந்தது, வேண்டிக்கொண்டார். அடுத்த க்ஷணம் மத்தள வயிறன், உத்தமி புதல்வன், மற்பொருள் திரள்புய மத யானையாக வந்து மிரட்ட, கந்தனே கதி என்று வள்ளி ஜீவாத்மா முருகன் பரமாத்மாவுடன் லயமாயிற்று.

இப்படி தன்னை முதலிலேயே துதித்து கந்தரனுபூதி பாட நினைத்த அருணகிரி நாதருக்கும், தன்னை துதிக்கaமலேயே திரிபுரம் எரிக்க நினைத்த தந்தை சிவபெருமானுக்கும், வள்ளி அம்மையை அடைய முதலில் தன்னை நினைக்காமல் கடைசியில் நினைத்த சகோதரனுக்கும் அருள் வழங்கிய விதத்தை கண்டு அவர் கருணையை வியக்காமல் இருக்க முடியாது.

விநாயகரிடம் நாம் என்ன வேண்டி கொள்ளவேண்டும் என்று நமது குருஜி பின்வருமாறு வழிகாட்டுகின்றார் :

எப்போதும் என்மனம் உன் இணையடிதனை நாட 
செப்பற்கரிய உன்னை தினமும் கொண்டாட 
இப்பிறவிப்பிணி இனி வராமற் போக 
தப்பிதம் இல்லாமல் ஷண்முகன் தனை பாட
உந்தன் மனது வைத்து அருள்புரிவாய் !

நாமும் இந்த இணையதள பணி சிறப்பாக நடக்க பஞ்சக்கர ஆனை பதம் பணிவோம்.


அன்புடன்...

ஹரிஹரன்
முலுண்டு 











   


1 comment:

  1. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள், ஹரிஹரன் சார் அவர்களே.
    “பஞ்சக்கரவானை பதம் பணிவோம்”. பஞ்சக்கரவான் அந்த ஐந்து திருக்கரங்களையுடைய ஆனைமுகத்தோனை மட்டுமா நாம் வேண்டிகிறோம்?
    பஞ்ச கர வான் ஐ – பஞ்சபூதங்களில் ஒளிந்தும் வெளிப்பட்டும் உள்ளவனாக திகழும் தலைவன் முருகனுமா? அல்லது பஞ்சக் கரவான் - பஞ்சாட்சர பொருளுக்கு உரிய சிவபெருமானுமா? அல்லது பஞ்சக் கரவான் - அழகிய ஸ்ரீ சக்கர நாயகியாக உள்ள உமையுமா? அல்லது பம் சக்கர வானை - அழகிய காக்கும் ஸ்ரீ சுதர்சன சக்ரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் அந்த திருமாலுமா? அல்லது பம் சக்கர வான் ஐ - அழகிய வட்டவடிவமான வானில் உல்ள தலைவனான சூரியனா? இல்லை ‘அறுசமய சாத்திரப் பொருளோனே’ என அருணகிரி ஸ்வாமிகள் பிறிதோரிடத்தில் சொல்வது போல் அறு சமய கடவுள்களை ஒன்றாக பிரார்த்திக்கிறோமா? எப்படியாயினும் அந்த ஒரு சொல்லில் சொல்லாமல் சொல்லி நம்மை வணங்க வைக்கும் பாங்கு சொல்லில் அடங்காது. அதனை நீங்கள் விவரித்திருக்கும் பாங்கும் அதைவிட அழகானது

    சாந்தா & சுந்தர ராஜன்

    ReplyDelete