9 seerana
Thursday, 18 June 2015
Wednesday, 17 June 2015
திருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாடங்கள்
(476 முதல் 503 வரை )
பாடல் . 2
(இசை வழிபாடு புத்தக எண்..43)
திருசெந்தூர் தலம்
சங்கரானந்தப்ப்ரியா அங்க தாளம் 2 .....1/2....1/2
பூரண வார கும்ப சீதப டீர கொங்கை
மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று
போதவ மேயி ழந்து போனது மான மென்ப ...... தறியாத
பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச
பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து
போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து ...... மயல்தீரக்
காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து
யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து
காலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டு ...... விழிபாயக்
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க ...... அருள்வாயே
ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க
ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு
மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு ...... முரவோனே
ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற
சூரனை மாள வென்று வானுல காளு மண்ட
ரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த ...... முருகேசா
வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு
வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த
மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் ...... மருகோனே
வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து
சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து
வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த ...... பெருமாளே.
சொல் விளக்கம்
பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச
லீலையிலே உழன்று ...
நிறைந்து, கச்சு அணிந்த, கும்பம் போன்ற,
குளிர்ந்த சந்தனக் கலவை அணிந்த மார்பகங்களை உடைய
விலைமாதர்களுடைய அவலட்சணமான, வஞ்சகமான ஆடல்
பாடல்களில் அலைப்புண்டு,
போது அவமே இழந்து போனது மானம் என்பது அறியாத
பூரியனாகி ...
பொழுதை வீணாக இழந்து, மானம் போய் விட்டது
என்பதை அறியாத கீழ் மகனாகி,
நெஞ்சு காவல்ப டாத பஞ்ச
பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து
போனவர் வாழ்வு கண்டும்
மனத்தால், கட்டுக்குஅடங்காத ஐம்பெரும் பாதகங்களைச்* செய்தவனாக, தருமமேசெய்யாமல் அடியோடு இறந்து போனவர்களுடைய வாழ்வைப் பார்த்தும்,
ஆசையிலே அழுந்து மயல் தீரக் காரண காரியங்கள் ஆனது
எ(ல்)லாம் ஒழிந்து ...
ஆசையில் அழுந்தும் (எனது) மயக்கம்
ஒழியும்படி, காரணம், காரியம் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஒழிந்து,
யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து கால் உடல்
ஊடி அங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய ...
நான் எனவரும் ஆணவம் நீங்கி, தூயவனாக இருந்து, பிராண வாயு உடலின் பலபாகங்களுக்கு ஓடி, மூக்கின் மேல் இரண்டு விழி முனைகளும் பாய,
காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல்
உன்றன் நீடிய தாள் நினைந்து ...
காயம், வாக்கு, மனம் என்னும்
மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது
அழிவற்ற திருவடிகளை நினைந்து,
காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே ...
காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப்
போல் நான் விளங்கும்படி அருள் புரிவாயாக.
ஆரணசார மந்த்ர வேதம் எ(ல்)லாம் விளங்க ஆதிரையானை
நின்று தாழ்வன் எனா வணங்கும் ...
வேதசாரமான மந்திரங்களும்,
வேதங்கள் எல்லாமும் விளங்கும்படியாக, (தேவாரப் பாக்களால்)
திருவாதிரை நாளை உகந்துள்ள சிவபெருமானை எதிர் நின்று
வணங்குவேன் என்று (உலகுக்குக் காட்டி) வணங்கும்
ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சும் உரவோனே ...
அன்பினால் மேம்பட்ட பூரணமான ஞானம் மிக்க திருஞான
சம்பந்தப் பெருமானே,
ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவாகி நின்ற சூரனை மாள
வென்று வான் உலகு ஆளும் அண்டரானவர் கூர் அரந்தை
தீர மு(ன்)னாள் மகிழ்ந்த முருகேசா ...
கடலில் எழுந்து மாமரவடிவுடன் நின்ற சூரனை, அவன் இறக்கும்படி வென்று, வானுலகைஆளுகின்ற தேவர்களுக்கு (உண்டான) பெரிய துன்பம் ஒழிய,முன்பொரு நாள் உதவி செய்து களிப்புற்ற முருகேசனே,
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின்
மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த ...
யானை (கஜேந்திரன்)ஆதிமூலமே என்று அழைத்த போது சக்கரத்தை எடுத்து வந்து,மடுவில் இருந்த முதலை பாழ்படும்படி எறிந்த
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன்
மருகோனே ...
கரிய மேகம் போல் இருண்ட திரு மேனியை உடைய
திருமாலின் மருகனே,
வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான
சங்கு மா மணி ஈன ...
வெண் மணலின் மீது வண்டல் ஓடியவாய்க்கால் வழியாக வந்து, கருப்பம் நிறைந்த சங்குகள் சிறந்தமுத்து மணிகளைப் பெறும்படியாக
உந்து வாரிதி நீர் பரந்த சீர் அலைவாய் உகந்த பெருமாளே. ...
அலை வீசுகின்ற கடல் நீர் பரந்துள்ள திருச்சீரலைவாயில்
(திருச்செந்தூரில்) மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.
உதவி ..கௌமாரம் இணையதளம்
குருஜியுடன் இணைந்து அன்பர்கள் பாடியுள்ள பாடல்
முருகாசரணம்
Tuesday, 16 June 2015
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில் ...... மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
யுனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்துபொருள்
உணர்த்துநா ளடிமையு ...... முடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு ...... முருகோனே
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி ...... வயலூரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ் ...... குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகிய ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
கருப்பு வி(ல்)லில் மருப் பகழி தொடுத்து மதன் விடுத்து
அனைய கடைக் க(ண்)ணொடு சிரித்து அணுகு கருத்தினால்
விரகு செய் மடமாதர் ... கரும்பு வில்லில் வாசனை உடைய மலர்க்
கணைகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தியது போல் கடைக் கண்
நோக்குடன் சிரித்து நெருங்கி, எண்ணத்தினால் தந்திரச் செயல்கள்
புரிகின்ற இளம் மாதர்களின்,
கதக் களிறு திடுக்கம் உற மதர்த்து மிக எதிர்த்து மலை
கனத்த இரு தனத்தின் மிசை கலக்கும் மோகனம் அதில்
மருளாதே ... கோபமுள்ள யானையும் திடுக்கிடும்படி செழிப்புற்று
மிகவும் எதிர்த்து, மலை போல் பருத்துள்ள இரண்டு மார்பகங்களின்
மேல் கலந்து கொள்ளும் மோக வெறியில் மயங்காமல்,
ஒருப் படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து
அருளி உனைப் புகழும் எனைப் புவியில் ஒருத்தனாம் வகை
திரு அருளாலே ... மனம் ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும்
எண்ணம் என் மனதில் உண்டாகும்படி உனது திரு உள்ளத்தில்
நினைத்து அருள் செய்து, உன்னைப் புகழ்ந்து பாடும் என்னை
நிகரில்லாத புலவனாகும் வகையை உன்னுடைய திருவருளால்,
உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி எனக் குறுகி
உரைக்க அ(ம்) மறை அடுத்து பொருள் உணர்த்தும் நாள்
அடிமையும் உடையேனோ ... ருத்திர மூர்த்தியும் விளக்கம் பெற
வேண்டி, எனக்கு உபதேசித்து அருளுக என்று உன்னை அணுகிக்
கேட்க, நீ அவருக்கு உபதேசித்த அந்த ரகசியப் பிரணவப் பொருளை
அடியேனுக்கும் உணர்த்தும்படியான நாள் ஒன்றை அடியேனும்
பெறுவேனோ?
பருப்பதமும் உருப் பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு
படிக் கடலும் அலைக்க வ(ல்)ல பருத்த தோகையில் வரு
முருகோனே ... (கிரெளஞ்ச) மலையையும், பெரிய உருவம் உள்ள
அரக்கர்களையும், ஒலித்து எழுகின்ற, பூமியிலுள்ள ஏழு
கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருமையான மயிலில்
மீது வரும் முருகனே,
பதித்த மரகதத்தினுடன் இரத்னமணி நிரைத்த பல பணிப்
ப(ன்)னிரு புயச் சயில பரக்கவே இயல் தெரி வயலூரா ...
பதிக்கப்பட்ட மரகதத்துடன் ரத்தின மணிகள் வரிசையில்
அமைக்கப்பட்ட பலவகையான அணிகலன்களை அணிந்துள்ள,
மலை போன்ற பன்னிரண்டு புயங்களை உடையவனே, விரிவாகவே
இலக்கியத் தமிழைத் தெரிந்த வயலூர் முருகனே,
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகைமை
செயித்தருளும் இசைப் பிரிய திருத்த மாதவர் புகழ்
குருநாதா ... திருப்புகழை உரைப்பவர்களுடையவும்
படிப்பவர்களுடையவும் வறுமையும் பகைமையும் தொலைந்து
வெற்றி தந்தருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய சிறந்த
தவத்தினர் புகழ்கின்ற குருநாதனே,
சிலைக் குறவர் இலைக் குடிலில் புகைக் கள முகில் புடை
செல் திருப் பழநி மலைக்குள் உறை திருக்கை வேல்
அழகிய பெருமாளே. ... வில் ஏந்திய குறவர்களுடைய ஓலைக்
குடிசையிலும், புகை போன்ற கருமையுடைய மேகங்கள் அருகில்
தவழ்ந்து செல்லுகின்ற அழகிய பழனி மலையிலும் வீற்றிருக்கும்,
திருக்கையில் வேல் ஏந்தும் அழகிய பெருமாளே
Monday, 15 June 2015
திருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள்
(476 முதல் 503 வரை )
நம்குருஜியினால்திருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 28 பாடல்களின் தொகுப்பு இசையோடு குறுந்தகடாக சென்னையில் 2013 ல் நடை பெற்ற ஆன்மீக பெரு விழாவில் வெளியிடப்பட்டு ,பிரதிகள் அன்பர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.ஆனால் மேற்கொண்டு பிரதிகள் மற்ற அன்பர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது.
இதற்கு இடையில் அப்பாடல்கள் முழுவதும் இடம் பெற்ற ஒரு வழிபாடு 17.102010 விஜய தசமி அன்று சென்னையில் குருஜியின் தலைமையில் நடைபெற்றது.அதை அருளாளர் சென்னை G.V. நீலகண்டன் சென்னை வலைத்தளத்தில் அளித்துள்ளார்கள். அதன் குறியீடு
http://www.4shared.com/audio/
மேலும் அப்பாடல்கள் தனித்தனியாக audio வடிவில் ,பல அருளாளர்களின் கடும் உழைப்பினால் உருவான "திருப்புகழ் நவமணி " DVD எண் 1 ல் இடம் பெற்றுள்ளன.
எங்களது பங்காக பாடல்களை ஒவ்வொன்றாக VEDIO வடிவில் அன்பர்களுக்கு அளிக்க பேராவல் கொண்டு,தொடங்குகிறோம்..பாடல்கள் மூலம்,பொருள்,விளக்கங்களுடன் இடம் பெரும்.
பாடல் 1
தலம் ........திருச்செந்தூர்

எ ண் வரிசை 1 புத்ததக எண் 18.
ராகம் .சுத்த தன்யாசி அங்கதாளம் தகிட தகதிமி தகதிமி தகதிமி
71/2 1/2 2 2 2
பாடல் பகுதி 5 ல் தொடங்கி பகுதி 6,7,8 பின் பகுதி 3,4 டன் முடிவு பெறும்
1. உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே
2. உரைக்கும் வீரிகள் கோளர வாமென
வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ
3. அருக்கன் போலொளி வீசிய மாமுடி
யனைத்துந் தானழ காய்நல மேதர
அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே
4. அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய்
5. இருக்குங் காரண மீறிய வேதமும்
இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி
6. இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா
7.திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
துதிக்குந் தாளுடை நாயக னாகிய
செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே
8. செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.
சொல் விளக்கம்
உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக
விகாரிகள் ... உருக்கமான மொழிகளைப் பேசும் தந்திரம் உள்ளவர்,
பிறரிடமிருந்துப் பொருள் கவரும் குற்றம் உள்ளவர், மோக விகாரம்
கொண்டவர்,
உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் மதியாதே உரைக்கும்
வீரிகள் ... உருட்டிப் பார்க்கும் பார்வையர், மிக்க பழிகாரிகள்,
மதிக்காமல் பேசும் அகங்காரம் உள்ளவர்,
கோள் அரவாம் என உடற்றும் தாதியர் ... கொல்ல வருகின்ற
பாம்பு போல வருத்துகின்ற தாசிகள்,
காசளவே மனம் உறைக்கும் தூரிகள் மீதினில் ஆசைகள்
புரிவேனோ ... கிடைத்த பொருளுக்குத் தக்கபடி மனத்தை அழுந்தச்
செலுத்தும் துன்மார்க்கம் உள்ளவர்கள் (இத்தகையோர்) மேலே விருப்பம்
வைப்பேனோ?
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அனைத்தும் தான்
அழகாய் நலமே தர ...
சூரியனைப் போல் ஒளி வீசும் பெருமை மிக்க
இரத்தின கிரீடங்கள் யாவும் காண்பவர்களுக்கு அழகாக விளங்கும்
நன்மையே வழங்க,
அருள் கண் பார்வையினால் அடியார் தமை மகிழ்வோடே
அழைத்தும் சேதிகள் பேசிய காரண ...
அருள் கண் பார்வை
கொண்டு அடியார்களை மகிழ்ச்சியுடன் அழைத்தும், அவர்களுடன்
விஷயங்களைப் பேசியும் இருந்த மூலப் பொருளே,
வடிப்பம் தான் எனவே எனை நாள் தொறும் அதிக்கம் சேர்
தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய் ..
. திருந்திய குணம்உள்ளவன் தான் இவன் என்று என்னை தினமும் மேன்மேலும்
சிறப்புறும் வண்ணம் உனது திருவருளால் இப்பொழுதே
இனிமையுடன் ஆண்டருள்வாயாக.
இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே
தொழு தேவர்கள் இடுக்கண் தீர் கனனே
... ரிக்கு வேதமும்,காரணங்களைக் கடந்து நிற்கும் தனிச் சிறப்புடைய (தமிழ்) வேதமும்
(தேவாரமும்), அவற்றுள் மறைந்து கிடக்கும் உட்கருத்துக்களைக்
கூறும் வேதசாரமாகிய ஆகமங்களும் தொழுகின்ற தேவர்களின்
துன்பம் தீர்க்கின்ற பெருமை வாய்ந்தவனே,
அடியார் தவமுடன் மேவி இலக்கம் தான் எனவே தொழவே
மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் .
.அடியார்கள் தவநெறியில் நின்று இவரே நமது குறிப் பொருள் என்று தொழவே,
மகிழ்ந்து விருப்பம் மிகக் கொள்ளும் முன்னைப் பழம் பொருளாய்
நிற்பவனே,
உலகு இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா ..
.
உலகங்களை எல்லம் சம்ஹாரம் செய்பவரும், ஆத்தி மலரைச் சூடிய
சடையை உடையவருமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே,
திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை
நாயகன் ஆகிய
முன்று காலங்களையும் காண வல்ல தவ
சிரேஷ்டர்கள் வேதியர் முதலானோர் வணங்கும் திருவடிகளை
உடைய பெருமானாகியவரும்
செகச் செம் சோதியும் ஆகிய மாதவன் மருகோனே .
..
உலகுக்குப் பேரொளியாய் விளங்குகின்றவரும் ஆகிய திருமாலின்
மருகனே,
செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும்
வாழையுமே திகழ்
செழிப்புள்ள நெற் பயிரும் மேகத்தை எட்டி
வளர்ந்துள்ள கரும்புச் சோலையும் வாழை மரங்களும் பொலிகின்ற
திருச்செந்தூர் தனில் மேவிய தேவர்கள் பெருமாளே.
.
திருச்செந்தூரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.
பாடல் இசை வடிவில்
முருகா சரணம்
r
Sunday, 7 June 2015
வைகாசி விசாகம் வைபவம் -நிறைவு.
வைகாசி விசாகம் வழக்கம்போல் மும்பை அஹோபிலமடம் வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது மும்பையின் பல பகுதிகளிருந்து அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.ஷண்முக சஹஸ்ரநாமஅர்ச்சனையில்தொடங்கி,வழிபாட்டில் வேல் விருத்தம்,மயில் விருத்தம் முழுமையாக இடம் பெற்றது அனைவருக்கும் வரப்ரசாதமாக அமைந்தது.
சில காட்சிகள்
புகைப்பட உதவி அருளாளர் K.R.பாலசுப்ரமணியம்.அவர்களுக்கு நன்றிகள் பல
சென்னை வைபவம்
சென்னையில்,வைகாசி விசாக வழிபாடு வைபவம் வேளச்சேரி சுவாமி கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் ஆஸ்ரமத்தில் காலை 9 மணீயிலிருந்து. 12 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.சில காட்சிகள்
புகைப்பட உதவி...அருளாளர் மாலதி ஜெயராமன் அவர்களுக்கு நன்றிகள் பல.
சில பகுதிகள் இசை வடிவில்
https://youtu.be/RGvlMM3XhLM
அளித்துள்ள அருளாளர் ஐயப்பனுக்கு நன்றிகள் பல
முருகா சரணம்
வைகாசி விசாகம் வழக்கம்போல் மும்பை அஹோபிலமடம் வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது மும்பையின் பல பகுதிகளிருந்து அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.ஷண்முக சஹஸ்ரநாமஅர்ச்சனையில்தொடங்கி,வழிபாட்டில் வேல் விருத்தம்,மயில் விருத்தம் முழுமையாக இடம் பெற்றது அனைவருக்கும் வரப்ரசாதமாக அமைந்தது.
சில காட்சிகள்
புகைப்பட உதவி அருளாளர் K.R.பாலசுப்ரமணியம்.அவர்களுக்கு நன்றிகள் பல
சென்னை வைபவம்
சென்னையில்,வைகாசி விசாக வழிபாடு வைபவம் வேளச்சேரி சுவாமி கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் ஆஸ்ரமத்தில் காலை 9 மணீயிலிருந்து. 12 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.சில காட்சிகள்
புகைப்பட உதவி...அருளாளர் மாலதி ஜெயராமன் அவர்களுக்கு நன்றிகள் பல.
சில பகுதிகள் இசை வடிவில்
https://youtu.be/RGvlMM3XhLM
அளித்துள்ள அருளாளர் ஐயப்பனுக்கு நன்றிகள் பல
முருகா சரணம்
Subscribe to:
Posts (Atom)
