Thursday, 13 June 2019


                                 ஆனி மூலம் வைபவம் 



                                                                               


அருணகிரிநாதரின் அவதார நன்னாளான ஆனி மூலம்   வைபவம்
வழக்கம்போல்  இசை வழிபாடுடன் முலுண்டில் பிரம்மபுரி மண்டபத்தில்  ஜூன்   18ம்  நாள் செவ்வாய் கிழமை அன்று பிற்பகல் 4.15 அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி நடைபெற உள்ளது .அன்பர்கள் பெருமளவில்  கலந்து கொண்டு பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் 


                                



அந்த நன்னாள்  நாட்டின் பல திருத்தலங்களில் வெகு சிறப்பாக நடை பெற உள்ளது.

திருவண்ணாமலை தலத்தில்  ஜூன் 17 ம் நாள்  அன்று பல குழுக்கள் இணைந்து வெகு சிறப்பாக கொண்டாட உள்ளார்கள்.

அழைப்பிதழ் 


                                                                  



அதற்கு முன்னோடியாக நம் சென்னை அன்பர்கள் திருவண்ணாமலை திருத்தலத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்  முகாமில் அவர் சன்னிதானத்தில் திருப்புகழ் இசை வழிபாடு ஜூன் 15 ம் நாள் காலை 11மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்க உள்ளார்கள்.

அழைப்பிதழ் 

Special Thiruppuggazh Isauvazipadu will be held at H H Kanchi Shankaracharya:s camp at. Thiruvannamalai.
Date: Saturday 15th June 2019. Time 11 AM to 2 PM
All Anbargal are requested to attend. Anbargal are requested to make their own travel arrangements etc.
From K Muthuswamy, Secretary, Thiruppuggazh Anbargal (Regd), Chennai Region.  

 இந்த சந்தர்ப்பத்தில்  குருஜி "திருப்புகழ் கனி அமுதம்" விழா மலரில் (செப்டம்பர் 1998) எழுதியுள்ள ஓர் ஆங்கில கட்டுரையை அளிக்கிறோம்.


 மற்றும்  அருணகிரியாரின்  வரலாற்றில்  ஒர்  அற்புதமான நிகழ்வை  பார்ப்போம்

# கருணைக்கு அருணகிரி :-

வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அறுத்து  விடுவார்.


இந்த போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர், இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார்.


அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். 


இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதிராளியின் காதுகளில் துரட்டினை பூட்டினர்.


அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

             (கந்தர் அந்தாதி ...54)

இதற்கு பொருள் கூற முடியாமல், வில்லிபுத்தூரார் தோல்வியை ஒப்புக் கொண்டார். தோல்வி அடைந்த போதும், வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல், இந்தப் புலமை போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார்.


வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார்

 இதனால், "கருணைக்கு அருணகிரி" என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். 

வில்லிபுத்தூரார் தமது தவறிற்கு பரிகாரமாக மகாபாரதத்தை, "வில்லிபாரதம்" என்ற பெயரில் தமிழில் எழுதினார்.


இந்த பாடலின் பொருளை திருமுருக கிருபானந்த வாரியார் பின்வருமாறு விளக்குகிறார்.


திதத்த ததித்த: திதத்த ததித்த     என்னும் தாள வாக்கியங்களை,

திதி:                               தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை:                         உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத:                              மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி:                           புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி:                            பாம்பாகிய ஆதிசேசனின்,
தா:                                 முதுகாகிய இடத்தையும்,
தித:                               இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து:                           அலை வீசுகின்ற,
அத்தி:                           சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய                                                                                             வாசற்தலமாகக் கொண்டு),

ததி:                              ஆயர்பாடியில் தயிர்,

தித்தித்ததே:              மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று                                                                      சொல்லிக்கோண்டு,
து:                                 அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து:                      போற்றி வணங்குகின்ற,
இதத்து:                       போரின்ப சொரூபியாகிய,
ஆதி:                             மூலப்பொருளே,
தத்தத்து:                     தந்தங்களை உடைய,
அத்தி:                          யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை:                       கிளி போன்ற தேவயானையின்,
தாத:                             தாசனே,
திதே துதை:               பல தீமைகள் நிறைந்ததும்,
தாது:                            ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால்                                                            நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி:              மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து:               பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி:              எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ:                                  அக்னியினால்,
தீ:                                  தகிக்கப்படும்,
திதி:                             அந்த அந்திம நாளில்,
துதி தீ:                         உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த                                                         என்னுடைய புத்தி,
தொத்ததே:                உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.  

அன்பர்கள் நிகழ்ச்சிகளில்  பெருமளவில் 
கலந்து கொண்டு பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

முருகா சரணம் 

U TUBES published by us are available on the following Link

https://www.youtube.com/channel/UCig4GnMNmCHwvGlQVUHr_NA/videos

                                                                                  

Saturday, 11 May 2019

மும்பையில் வைகாசி விசாகம் வைபவம்



                                         மும்பையில்  வைகாசி விசாகம் வைபவம் 
                                                                

                                                                  
                                                                 
                                                                      
வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் வரும் புனிதமான பௌர்ணமியை 'வைகாசி பூர்ணிமா' அல்லது 'வைசாகி பூர்ணிமா' என்று அழைக்கின்றனர். அந்தப் பௌர்ணமி அன்று மேலே விரிந்திருக்கும் ஆகாயம் பிரகாசமாக இருக்கும். வெட்ப பிரதேசமான நம் நாட்டின் ஆகாய வெளியில் வெள்ளியைப் போல மின்மினுக்கும். தன்னுடைய உடலை வெளிக் காட்டியபடி மெல்ல சந்திரன் வெளி வந்து ஆகாயத்தில் உள்ள வெள்ளை மேகங்கள் மீது மெல்லத் தவழும் பொழுது ஆகாயங்கள் அதற்கு வணக்கம் கூறி வரவேற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இது இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகும். இப்படியாக நமக்குப் புரியாத வகையில் இதமான வெளிச்சத்தை வழங்கியபடி வெளி வரும் சந்திரனின் பௌர்ணமி தினம் புத்த மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் விஷேமான தினமாகும்.

'விசாகன்' எனப்படும் முருகனின் பிறந்த நட்சத்திரமே 'விசாகம்' என்பதினால் அது மிகவும் புனிதமான தினமாகக் கருதப்படுகின்றது. விசாக நட்சத்திர தினத்தின் அன்று மூன்று நட்சத்திரங்கள் ஒன்று சேர்வதினால் ஆகாயம் ஒரு நுழை வாயிலைப் போலத் தெரிகின்றது. 'வைகாசி'யில் பதினான்காம் நாள் அன்று தோன்றும் அந்த நட்சத்திரத்தன்று சூரியன் பூமத்திய ரேகையைக் கடப்பதினால் அந்த மாதம் முழுவதும் அதிக வெட்பமாக உள்ளது.

வைகாசி விசாக தினம் 'சைவ', 'வைஷ்ணவ', மற்றும் புத்த மதத்தினருக்கும் முக்கியமானது. சைவர்களைப் பொறுத்தவரை 'வைகாசி விசாகம்' என்பது 'முருகன் அவதரித்த தினம்'. வைஷ்ணவர்களுக்கு அது 'பெரியாள்வார் ஜெயந்தி'. மற்றும் புத்த மதத்தினருக்கு அது அற்புதங்கள் நிகழ்த்திய, ஞானம் பெற்ற புத்த மகான் 'மஹாசமாதி' அடைந்த தினம். 

முருகன் பிறப்பை ஷண்முக அவதாரம் என்கின்றனர். 'சூரபத்மன்', 'சிங்கமுகன்' போன்றவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, 'சூரபத்மன்', 'சிங்கமுகன்' மற்றும் 'தாரகன்' என்ற மூன்று அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலை நாட்ட முருகன் அவதரித்த தினம் அது. அந்த மூன்று அரக்கர்களும் பல்வேறு வரன்களைப் பெற்றிருந்து பலம் பெற்று இருந்ததினால் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். அதனால் தேவர்கள் சிவபெருமானை வேண்டி துதித்து வேண்ட சிவபெருமான் ஆறுமுகனைப் படைத்தார். 'குமாரகுருபரர்' கூறியதைக் கேளுங்கள்:

ஐந்து முகத்தோடோடு முகமும்
தந்து திருமுகங்கள் ஆறாக்கி

திருமூலர் ஆயிரம் ஆண்டுகள் முன் எழுதிய தன்னுடைய திருமந்திரத்தில் அந்த செய்தியை இப்படியாக எழுதினார்:

எம்பிரான் முகமைந்தோடு மருயா
எமே பிறனுக் கதோமுகமருல

தன்னுடைய நெற்றிக் கண்ணில் இருந்து சிவபெருமான் ஆறு நெருப்புத் துளிகளை வெளியேற்ற, அது ஜொலித்தவாறு உலகில் வெளி வந்தது. அந்த பொறிகளை 'வாயு'வும் 'அக்னி'யும் கொண்டு போய் 'கங்கை'யில் தள்ள, அது அவற்றை 'சரவணப் பொய்கை'யில் தாமரை மலர்களும் கோரைப் புற்களும் இருந்த இடத்தில் வெளித் தள்ளியது. தாமரையை நல்ல இதயம் போலவும் நாணல் புதரை உடலின் நரம்புகள் போலவும் தத்துவார்த்தமாகக் கருத வேண்டும். அந்த நதி தெய்வீக உருவமாக இருந்ததினால் 'தாமரை'யும் மற்றும் 'நாணல் புதர்' என அனைத்தும் ஒன்றுடன் ஒண்றிணைந்து உள்ள தத்துவம் விளங்கும்.

ஒருவனின் ஆறு குணங்களான உடல், மூச்சு, மனம், உணர்வு, விவேகம் மற்றும் அகம்பாவங்களைக் குறிப்பவையே முருகனின் ஆறு முகங்கள்.
ஏரியில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளா மாறி விட, அவற்றை ஆறு கிருத்திகைகள் எடுத்து வளர்த்தன. அந்த ஆறு குழந்தைகளையும் சக்தி தேவி எடுத்து அணைக்க, அந்த ஆறு குழந்தைகளும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தைகயாக மாறின. அதுவே வைகாசி மாத பூர்ணிமாவில் தெய்வீகம் பொருந்திய ஷண்முக அவதாரம் எனக் கூறப்பட்டது.

கச்சியப்ப சிவாச்சாரியார் "உலகத்திற்கு விமோசனம் தருவதெற்கென்று முருகன் ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் ஒன்றுக்கு மேற்பட்டவராகவும், ஆரம்பம் அற்றவராகவும், உருவம் இல்லாத உருவத்துடனும் ஒளி வெள்ளம் போன்ற பிரும்மனாக அவதரித்தார்." என்று வலிப்பு படுத்துகிறார்.

அறுவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றை
பிரும்மமாய் நின்ற ஜோதி பிலம்பதோர் மேனியாக
கருணைக்கோர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டு கொண்டே
ஒரு திருமுருகன் வந்திங்கு உதித்தானாம் உலகம் உய்ய


"மனதாலும், எண்ணங்களினாலும் விவரிக்க முடியாத, ஏன் வேதங்களினாலும் கூட விவரிக்க இயலாத எங்கும் நிறைந்துள்ள சிவம் ஆறு குழந்தைகளாக எழுந்து ஆறு தாமரை இலைகளில் சரவணப் பொய்கையில் மலர்ந்தது" என்று கூறுகிறார். 


முருகப் பெருமான்  சுப்ரமணியனாக அதாவது 'சு-ப்ரமண்யா' அதாவது எதில் இருந்து அனைத்தும் வெளிவந்து முடிவில் அடங்குமோ அந்த பிரபஞ்சத்தில் வியாபித்து இருப்பவர், எங்கும் நிறைந்து இருப்பவர், மயில் மீது அமர்ந்து இருக்கும் சேனாதிபதி, கையில் ஒரு வேலினை வைத்திருந்தபடி தேவயானை மற்றும் வள்ளியுடன் தோன்றுபவர், அதர்மத்தை நிலை நிறுத்த ஷண்முகனாக வந்தார் என்று கூற வேண்டும்.

அவர் கார்த்திகேகைகளினால் வளர்ந்ததால் கார்த்திகேயனாகவும், ஒவ்ஒருவர் மனதிலும் வசிப்பதால் குஹனாகவும், சரவணை பொய்கையில் இருந்து வந்ததினால் சரவணபவனாகவும், ஆறுமுகங்களைக் கொண்டவராக இருந்ததினால் ஆறுமுகனாகவும் ஆனார். 

முருகனை சிவப்பானவர் என்ற அர்த்தத்தில் சீயோன் என கூறினாலும் தத்துவ நீதியில் அவர் நீல நிறமானவர் என்றே கூறப்பட்டு உள்ளது. சில நேரங்களில் அவர் இரண்டு மனைவிகளான வள்ளி மற்றும் தெவயானையுடனும் மயிலின் பக்கத்தில் நின்றிருக்க, மயில் தன் அலகில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டு இருப்பது போன்ற காட்சி சிலவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில் உள்ள அனைத்திற்கும் ஒவ்ஒரு அர்த்தம் உண்டு. ஆகாயம், மற்றும் பூமியைப் போல எல்லையற்ற நிலையைக் குறிப்பதே நீலநிறம்.

அனைவரின் இருதயக் குகைகளிலும் வசிப்பவன் குஹன் என்ற உண்மையை பிரதிபலிக்கும் தன்மையை குறிக்கும் நிலையை காட்ட அவரவர்களின் உள்ளத்தில் உள்ள ஐம்புலன்களுடன் கூடிய ஆறு (ஷண்) முகமாக காட்சி தருகிறார்.

மயில் 'அழகையும் செருக்கையும்' குறிக்கின்றது. பாம்பு 'தான்' எனும் அகம்பாவத்தை குறிக்கும். ஓவ் ஒரு மனிதனும் உலகத்தில் உள்ள சிற்றின்ப ஆசைகளைத் தேடி ஓடுகின்றனர். 'தான்' என்ற அகம்பாவத்தின் காரணம் 'அறியாமை' என்கின்ற 'அவைத்தியா'. அதை அடக்கி வெற்றி கொண்டு உண்மையைத் தேடிப் போக வேண்டும். அந்த தத்துவத்தைத்தான் பாம்பை தன் அலகில் கௌவிக் கொண்டு உள்ள மயில் உருவம் எடுத்துக் காட்டுகின்றது. 

தீய எண்ணங்களையும், இயலாமையையும் அழித்து விடுவது வேல் என்பதினால் அது விவேகத்தைக் குறிக்கும். விடா முயற்சி, இச்சா சக்தி மற்றும் தூய்மையான அன்பை எடுத்துக் காட்டும் விதமாக வள்ளி காட்சி தர , இறவாமை, கிரியா சக்தி மற்றும் செயல் திறமையையும் வெளிப்படுத்துபவளாக தேவயானை இருக்கின்றாள். ஆக அந்த மூன்று சக்திகளும் ஒண்றிணைந்து அகம்பாவத்தை அழிக்கின்றன.
மஹா பெரியவா தெய்வத்தின் குரல் முதல் பகுதியில ஸனத்குமார யோகிதான் சுப்ரமண்ய ஸ்வாமியா அவதாரம் பண்ணார்ன்னு ஒரு கதை சொல்றா. ஸனத்குமார யோகிங்கறவர் ப்ரம்மஞானி, ப்ரம்ம நிஷ்டர். உலகத்துல எந்த விதமான பற்றும் இல்லாதவர். அவருக்கு ஒரு நாளைக்கு தான் தேவ சேனாதிபதியாக இருந்து அசுரர்களோட யுத்தம் பண்ற மாதிரி ஒரு ஸ்வப்னம் வந்துதாம். அவர் அப்பாவான ப்ரம்மா கிட்ட போய் கேட்டாராம். ‘எனக்கு இப்படி ஸ்வப்னம் வந்துதே என்ன அர்த்தம்’ ன்ன போது, “நீ அடுத்த ஜென்மத்துல, தேவ சேனாதிபதியாக இருந்து அசுரர்களோட யுத்தம் பண்ண போற. உன் கனவுல வந்தா, நீ ஞானிங்கறதுனால அது நடக்கும்னு’ சொன்னாராம். ‘ஓஹோ அப்படியா’ ன்னு சொல்லி கேட்டுண்டு போயிட்டார்.

ஞானிகளுக்கு ஜன்மா எடுக்கறதை பத்தி வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை. அவாளுக்கு அது ஒரு பொருட்டு கிடையாது.
அப்போ பரமேஸ்வரன் பார்த்தாராம். இவர் ப்ரம்மஞானி, ஜன்மா எடுக்கறதை பத்தி அவர் ஒண்ணும் நினைக்கப் போறது இல்லை, அதுனால நாம தான் இதை ஆரம்பிக்கணும் ன்னு, பார்வதி பரமேஸ்வராள் போய், ஸனத்குமார யோகிக்கிட்ட, ‘உன்னுடைய தபஸ்ல த்ருப்தியானேன், உனக்கு ஏதாவது வரம் வேணும்னா கேளு’ன்னாளாம்

அவர் பார்வதி பரமேஸ்வராளைப் பார்த்து சிரிச்சிண்டு, ‘எனக்கு ஒண்ணும் தேவைகளே இல்லையே. எனக்கு ஒண்ணும் வரம் வேண்டாம். ஏதோ இந்த வரம் சாபம் இதிலேல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கற மாதிரி தெரியறது. உங்களுக்கு ஏதாவது வரம் வேணும்னா கேளுங்கோ’ன்னாராம். 

பரமேஸ்வரன் அதுக்கு தான் காத்துண்டு இருந்தார். ‘எனக்கு நீ குழந்தையா பொறக்கணும்’ ன்னு வரம் கேட்டாராம். இந்த சனத்குமாரர் யோகி ‘ஆகட்டும்’ அப்டீன்னாராம். ‘ஆனா நீங்க மட்டும் தான் என் கிட்ட கேட்டேள், அதனால நான் உங்களுக்கு மட்டும் குழந்தையா பொறக்கறேன்’ ன்னு சொன்னாராம்.

 அப்போ பார்வதி தேவி ‘கணவர் கேட்டா அது மனைவிக்கும் தானே. நான் தனியா கேட்க முடியுமா? நீ இப்படி சொல்லலாமா?’ ன்னு கேட்ட போது, இந்த ஸனத்குமார யோகி சொன்னாராம், ‘என்ன இருந்தாலும் ஒரு ஸ்த்ரீ சம்பந்தத்துல, கர்ப்ப வாசம் பண்ணி, ஊர்த்வமுகமா பொறக்கறதுல எனக்கு இன்னும்கூட லஜ்ஜை இருக்கு, அதனால நான் பரமேஸ்வரன் என்னை தன்னிடத்திலேயிருந்தே எப்படி உற்பத்தி பண்ணுவாரோ, அந்த மாதிரி நான் பொறக்கறேன்’ னாராம். 

‘எனக்கு அம்மான்னு ஆக வேண்டாமா, அம்மான்னு இருந்து குழந்தையை கொஞ்ச வேண்டாமா’ ன்னு பார்வதி கேட்டாளாம், அப்போ அவா ஒரு compromise பண்ணிண்டாளாம்.
பஸ்மாசுரன்னு ஒரு அசுரன் இருந்தான். அவன் யார் தலையைத் தொட்டாலும் அவா பஸ்மம் ஆயிடுவான்னு பரமேஸ்வரன் கிட்ட வரம் வாங்கிண்டு உன் தலையை தொடறேன்னு வந்தான்னு கதை இருக்கு இல்லையா! அப்பறம் விஷ்ணு பகவான் மோஹினியா வந்து விளையாட்டு காண்பிச்சு அந்த பஸ்மாசுரனை தன் தலையை தொட வச்சார்ங்கறது அப்புறம். அதுக்கு முன்னாடி ‘உன் தலையையே தொட வர்றேன்’ ன்னு சொன்ன போது அந்த இடத்துல பரமேஸ்வரன் அந்தர்த்யானம் ஆயிட்டாராம். மறைஞ்சு போயிட்டாராம். திடீர்னு பரமேஸ்வரன் மறைஞ்சு போயிட்டார்.

 உடனே பார்வதி தேவி, அம்பாள் எல்லாம் தெரிஞ்சவா தான், இருந்தாலும் விளையாட்டா இப்படி ஒரு கதை, அங்கேயே கணவனை காணோமேன்னு உருகி ஜலமா ஆயிட்டாளாம். அந்த ஜலம் சரவணப் பொய்கைன்னு இமயமலை அடிவாரத்துல ஒரு குளமாக இருந்தது. அந்த சரவணப் பொய்கையில முருகப் பெருமான் அவதாரம் பண்ணி, அந்த விதத்துல என் குழந்தைன்னு நான் சந்தோஷப் பட்டுக்கறேன்னு பார்வதி தேவியும் ஸனத்குமார யோகியும் ஒரு ராஜி (compromise) பண்ணிண்டாளாம். 
பரமேஸ்வரன் தன்னுடைய நெற்றியிலிருந்து அந்த ஸனத்குமார யோகியை ஆறு தீப்பொறிகளா ஆவிர்பவிச்சு, அதை அக்னி பகவான், கங்கைகிட்ட கொடுத்து, கங்கை தாங்க முடியாம அதை போய் சரவணப் பொய்கையில சேர்த்த போது, அங்க ஆறு தாமரைப் பூக்கள்ல ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அம்பாள் ஆறு குழந்தைகளையும் சேர்த்தணைத்த போது, ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும், ஒரு உடம்பு, ரெண்டு கால்களோட ஆறுமுகரா ஆனார்ங்கிற வரலாறு இருக்கு.
அப்படி பார்வதிக்கும் குழந்தை. 

ஆனா முருகப் பெருமானுடைய விசேஷம் என்னன்னா முழுக்க முழுக்க பரமேஸ்வரன் தன்னிடதிலேருந்தே சிருஷ்டி பண்ணின ஒரு குழந்தை. 

அதனால ‘ஸுதாங்கோத்பவோ மேஸி’ என்னுடைய அங்கத்துலருந்து நீ வந்துருக்கே, என்று சுப்பிரமணிய புஜங்கத்தில் ஒரு ஸ்லோகத்தில் வர்ணிக்கிறார்.

இவ்வாறு பல மகத்துவங்களைக் கொண்ட" வைகாசி விசாகம் " புனித நன்னாள் உலகம் முழுவதும்  குறிப்பாக திருப்புகழ் அன்பர்களால் பல பகுதிகளில் வழிபாட்டுடன் கொண்டாடப் படுகிறது.

வழக்கம்போல் மும்பையில் இந்த ஆண்டு மே மதம் 18 ம் நாள் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் சுப்பிரமணிய ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி திருப்புகழ் வழிபாடு  செம்பூர் அஹோபில மட வளாகத்தில் நடைபெற உள்ளது.மும்பை மற்றும் புணே அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

                                                                                         அழைப்பிதழ் 

                                                                                 



சுப்பிரமணிய  புஜங்கம் இசை வடிவில் 

                                                                  முருகா சரணம் 



Sunday, 24 March 2019

பங்குனி உத்திரம் நிறைவு


                                                                                  


                                                             பங்குனி உத்திரம்  நிறைவு                                                                            


பங்குனி உத்திரம் வைபவம் மும்பை செம்பூர் சங்கராலயம் சன்னிதானத்தில் வெகு சிறப்பாக நடந் தேறி யது .மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளிலிருந்து அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வழிபாட்டை பெருமானுக்கு சமர்ப்பித்தனர்.
  வைபவ முடிவில்  பாலு சாரும் அன்பர்களும் சங்கராலய நிர்வாகிகளால் கெளரவிக்கப்பட்டனர் 






                                                   சில புகைப்படத் தொகுப்புக்கள்.                   












                                                     வழிபாட்டின் சில பகுதிகள்  இசையுடன் 

                                                               பாலு சாரின்  விருத்தம் 

                                               "கனகம் திரள் " பாடல்   சங்கராபரணம்  ராகம் 

                
                                                                ராஜி மாமி யின் விருத்தம் 

                                            "திரைவார் கடல்" பாடல்   சுப பந்துவராளி ராகம் 

                                                                                                                                                                                                                                                        மணி சாரின் விருத்தம் 

                                                     "படர்புவியின் " பாடல்  பந்துவராளி ராகம் 

     
                                                               கிரிஷ்ணமுர்த்திசாரின்  விருத்தம் 
                                                 "கறைபடும் "  பாடல் யமுனா கல்யாணி  ராகம் 



                                                                                                                                                                           

                                                          நவி மும்பை அன்பர் ப்ரியாவின் விருத்தம் 
                                                  "ஊணுத்தசை உடல் " பாடல்   சிந்துபைரவி ராகம் 

           

                                                                               அன்பர்கள் 
                                               "குருதி மலசலம் " பாடல்  கேதார கௌளை ராகம் 


                                                                                                                                                                                                            முருகா சரணம்              

Thursday, 21 March 2019

அபிராமி அந்தாதி.... 39


                                            அபிராமி அந்தாதி....  
39

                                                                                       


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே


அன்பரின் விளக்கவுரை 
ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு - 

என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு
வாழ்விலே, மேலாக வாழ்வதற்கு, ஆளுமையோடு வாழ்வதற்கு, அந்த அம்பிகையின் அடித்தாமரைகள் இருக்கின்றன. வாழ்விலே நம்மைக் கைதூக்கிவிடும் அந்த தேவியின் பாதங்கள்.

ஆளுக்கைக்கு அடித்தாமரையும் யமன் கையினின்று மீளுகைக்கு கடைக்கண்ணும் என்பதை ஆதிசங்கரர் ' ஜன்ம ஜலதௌ நிமக்னானாம் முரரிபு வராஹஸ்ய த்ஷ்ட்ராபவதி ' - என்கிறார். ( ஸௌ.ல. 3 )
உயிர்கள் சம்சாரக்கடலில் மூழ்கித் தவிக்கும் போது அம்பாளின் இருபாதங்களும் வராஹமூர்த்தியின் இருகோரைப்பற்கள் போல இருக்கின்றன என்கிறார். தண்ணீரில் மூழ்கிக் கிடந்த ' பாசிதூர்ந்த பார்மகளை ' வராஹ அவதாரம் எடுத்துத் தனது கோரைப் பற்களில் தாங்கி வெளிக் கொணர்ந்தது போல அம்பாளின் திருவடிகள் ஸம்ஸாரக் கடலில் மூழ்கிய ஜீவர்களைக் கரையேற்றுவன என்பது பொருள்.
அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு 

எமனிடமிருந்து மீள்வதற்கு உந்தன் கடைக்கண்ணின் கருணைப்பார்வை உண்டு

அந்த தேவியின் கடைக்கண் பார்வையோ, அந்தகனின் வாய்க்குள் சென்றவனைக்கூட மீட்டுவிடும் சக்தி வாய்ந்தவை. இப்படி வாழ வைக்கவும், சாவிலிருந்து மீட்கவும் அந்த தேவியின் அருள் காத்துக் கிடக்க, ஒருவன் கடைத்தேற முடியாமல் போனால், அது அவனுடைய குறையே அல்லவா? இதைத்தான், பட்டரும், 'என் குறையே அன்றி, நின் குறை அன்று' என்று பேசுகிறார்.

அம்பிகையின் விழிகளிலாவது நாம் பட்டோமா? அதுவும் இல்லை. அதுவும் நம் குறையே! இயமனின் பிடிப்பிலிருந்து மீண்டிட அவளது திருவிழிகளின் கடைக்கண் பார்வை போதும். அந்த அரும் பார்வையைப் பெற்றிடவும் நாம் முனைந்தோமில்லை. திருவடிகளைப் பற்றிச் சிந்திக்காததும் அவற்றைப் பற்றி நெஞ்சில் வந்திக்காததும் நம் குற்றம். நமது கர்மவினையும் ஆணவ மலமும், மாயையுமே காரணம். இவற்றை ஒழித்து, இவற்றினின்று விட்டு விலகித் தள்ளி நிற்க முடியும். ஆனால் நாம் முனைந்தோமா? இல்லை. அன்னையைப் பற்றி எண்ணினோமா? இல்லை.
கடைக்கண் பார்வை விழுந்தால் எமனை வெல்லலாம். எமனது குறிப்பை முன்னர் சில இடங்களில் சொன்னார். இங்கும் சொன்னார். இனியும் இயம்புவார். ஏன் தெரியுமா? எமனை மார்க்கண்டேயன் வென்ற திருத்தலம் திருக்கடவூர். எமனது இடரை அபிராமிபட்டர் வெல்லப்போகும் இடமும் அவ் ஊரே. அங்கே வாழ்பவள் அபிராமி ; அதனால்தான் அடிக்கடி அதனை அபிராமி பட்டர் நினைவு கூர்கிறார். இவ்வளவு கருணையுள்ளம் கொண்ட அன்னையினது கருணையைப் பெற்றிடாமை நம்ம குறைதான்னு சொல்றார்.
மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று 

இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையே; அது உன் குறை இல்லை.

கடைசி இரண்டு அடிகளுக்கு வேறு வகையிலும் பொருள் சொல்வதுண்டு.
 இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்.
முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே 


 முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!

அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா - அஷ்டமியில் தோன்றும் அரைவட்ட சந்திரனைப்போல் பிரகாசிக்கும் நெற்றியுடன் சோபிக்கிறவள். இதையே - வாணுதல் ( வாள் - நுதல்) என்கிறார் அபிராமபட்டர்.


16. முகசந்த்ர - கலங்காப - ம்ருகநாபி - விசேஷகா - சந்த்ர மண்டலத்தில் களங்கம் காணப்படுவது போல தேவியின் முகமாகிற சந்த்ர மண்டலத்தில் நெற்றியின் கஸ்தூரி திலகம் களங்கம் போல் அழகு கூட்டுகிறது
இந்த அந்தாதியில் எம்பெருமானை "அம்பு தொடுத்த வில்லான்" என்கிறார். எல்லோரும் அறிந்த கதைதான். திரிபுரம் எரித்த கதை.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் இரும்பு,வெள்ளி, பொன் ஆகிய மூன்று உலோகங்களால் ஆன கோட்டைகளை ஆண்டு கொண்டிருந்தனர். அக் கோட்டைகள் வானில் பறக்க வல்லவை. அம்மூன்று கோட்டைகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றாய்க் கூடும். " மூன்றும் ஒன்றாய்ச் சேருங்கால் ஒரே அம்பினால் அவற்றை எய்தால் மட்டுமே அழிய வேண்டும் " என்னும் வரங்கள் அவர்கள் பெற்றிருந்தனர்.
மூன்று கோட்டைகளையும் பறக்க விட்டு அவற்றைக் கீழே இறக்கி ஆங்காங்குள்ள ஊர்களையும் உயிரினங்களையும் அழித்து வந்தனர். தேவர்கள் அஞ்சிச் சிவனிடம் வேண்டினர். அடுத்த முறை மூன்று மலைகளும் ஒன்று சேர்ந்து வானில் உலா வந்தன. சிவபிரான் மேரு மலையை வில்லாக்கித் திருமாலை அம்பாகவும், அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு நின்றார். கையில் வில், வாள், அம்புடன் நின்றனன்.
திருமாலும், அக்கினியும், மேருவும் தம்மால் கோட்டைகளைச் சிவன் அழிப்பார் என இறுமாந்தனர். அதுகண்டு அத்தன் சிரித்தான். முப்புரங்கள் அழிந்தன .
அந்த ஈசனின் இடப்பாகம் அமர்ந்த வாள் போன்ற நுதல் கொண்ட எம் அன்னையே அல்லவா முப்புரங்களும் அழிபடக் காரணமாயிருந்தவள்!


                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                         


அபிராமி சரணம் சரணம்!
முருகா சரணம் 



U Tubes published  by us are available in the following link